Friday, December 30, 2011

என் பறை முழங்குகிறது




என் பறை முழங்குகிறது
டட்டடா டடட்ட டட்டடா ….

புது வருடம் பிறக்கிறது
புதுயுகமும் பூக்கிறது

******

ஓ பாவிகளே
மனந்திரும்புங்கள்!

நீங்கள் கனவான்கள்
என்றுதான் அழைக்கப்படுகிறீர்கள்

ஆனால்…..
கனவீனங்களை மொத்தமாய்க்
குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்கள்

*******


உங்கள் இதய வீட்டை
உற்றுப் பாருங்கள்

பொறாமைத் தூசியால்
நிறைந்திருக்கிறது
ஓர் அறை

ஆபாசக் குப்பைகள்
குவிந்து கிடக்கிறது
மற்றோர் அறை

******



சுவரெங்கும்
சிந்திக் கிடக்கிறது
வட்டிக்கு வாங்கினவர்களின் இரத்தம்

உங்கள் பீரோக்களுக்குள்
அடைந்து கிடக்கிறது
ஆயிரமாயிரம் ஆத்மாக்களின்
பிராணன்கள்

பாத்திரங்களாகிப் போன
பத்திரங்களுக்குள்ளே
ஒவ்வொரு வரிகளுக்குள்ளும்
உடைந்து கிடக்கிறது
உயிர்த்துளிகள்

******

உங்கள் நிர்வாணங்களுக்குள்தான்
மறைந்து கிடக்கின்றன
ஏழைகளின் ஆடைகள்


உங்களுக்கு பசியாற்ற வந்தனர்
தாய்மார்கள்
பட்டினிக் கிடக்கின்றன
அவர்களின்
பச்சிளங்குழந்தைகள்


பாவாடை நாடாக்களில்
ஊஞ்சல் கட்டியாடுவதை
பொழுதுபோக்குகளாய்க் கொண்டவர்களுக்கு
குழந்தைகளின் கதறல்
கேட்கவா போகிறது?

என் பறை முழங்குகிறது
டட்டடா டடட்ட டட்டடா ….




******

புது வருடம் பிறக்கிறது
புதுயுகமும் பூக்கிறது

ஓ பாவிகளே!
மனம் திரும்புங்கள்

உங்கள் மூட்டைப்பூச்சி வேலைகளை
நிறுத்தும் காலம்
இதோ வந்துவிட்டது!


அழுகிப்போன உங்கள்
இதயங்களை
அறுவைச் சிகிச்சை
செய்யும் காலம்
இதோ வந்துவிட்டது!

புது வருடம் பிறக்கிறது
புது யுகமும் பூக்கிறது

என் பறை முழங்குகிறது
டட்டடா டடட்ட டட்டடா …

******



இனியாவது
உங்கள் வீடுகளைச் சுத்தப்படுத்துங்கள்

அழுக்கு வருடங்களை
அகற்றிப் போடுங்கள்

முகமூடிகளை அகற்றிவிட்டு
முகங்களை
அணிந்துகொள்ளுங்கள்

கண்ணாடி உருவங்களை
கல்லெறிந்து உடைத்துவிட்டு
முகமுகமாய்
தரிசனமாகுங்கள்

காலப்புத்தகத்தில்
உங்கள்
தண்ணீர் எழுத்துக்களை
அழித்துவிட்டு
கல்லெழுத்துக்களை
பொறியுங்கள்

ஏழைகளின் கண்ணீர்
துடைக்கப்பட்டால்தான்
தேசத்தாயின் கண்ணீரும்
துடைக்கப்படும்

புது வருடம் பிறக்கிறது
புதுயுகம் பூக்கிறது

என் பறை முழங்குகிறது
டட்டடா டடட்ட டட்டடா ….


டிஸ்கி:


நான் பதிவெழுத வந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகப்போகிறது. ஆனந்தவிகடனில் எனது வலைப்பூ வந்தது எனக்கு பெருமகிழ்சியைத் தந்தது. மேலும் பல நெகிழ்ச்சியான தருணங்கள் உண்டு. அவற்றை எனது 100-வது பதிவில் தெரிவிக்கிறேன்.

இதுவரைக்கும் என் வலைப்பூவிற்கு வருகைதந்து, வாக்குகள் இட்டு, பின்னூட்டமிட்டு, ஆதரவு தந்த பதிவர்கள் மற்றும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் !.







.

Wednesday, December 28, 2011

அன்பினால் எல்லாம் நடக்கும்

செல்வந்தர் ஒருவர் விலை உயர்ந்த குதிரை ஒன்றை வாங்கினார். அழகாக இருந்த அதன் மீது சவாரி செய்ய விரும்பினார். ஒவ்வொரு முறை அவர் அந்தக் குதிரையில் அமரும்போதும் அது மேலும் கீழும் துள்ளிப் பாய்ந்து அவரைக் கீழே தள்ளியது. இப்படியே பல நாட்கள் தொடர்ந்து நடந்தது. அவரும் பலவித முயற்சிகள் செய்து பார்த்தார். ஏதும் பயன் விளையவில்லை.

ஏராளமான பொருள் கொட்டி வாங்கிய அழகிய குதிரையில் சவாரி செய்ய முடியவில்லையே என்று வருந்தினார் அவர். அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். அவரைச் சந்தித்த செல்வர் தன் சிக்கலை எடுத்துச் சொன்னார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட அவர் “ நீர் குதிரையுடன் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறீர்? அதற்குத் தீனி வைக்கிறீரா? தண்ணீர் காட்டுகிறீரா? இல்லை அதன் உடலைத் தேய்த்து குளிப்பாட்டுகிறீரா? ” என்று கேட்டார்.

“ அதற்குத் தீனி வைப்பதும் குளிப்பாட்டுவதும் என் வேலையாட்களின் வேலை. சவாரி செய்ய மட்டும் நான் அதை வெளியே அழைத்து வருகிறேன். எதற்காகக் இதையெல்லாம் கேட்கிறீர்கள்? ” என்று கேட்டார் அந்த செல்வந்தர்.

“ நாளை முதல் அந்தக் குதிரையுடன் நீர் அதிக நேரத்தைச் செலவிடும். உம் கைகளாலேயே அதற்கு உணவு வையும். தண்ணீர் காட்டும். அதன் உடலைத் தேய்த்துக் குளிப்பாட்டும். உம் அன்பை அதனிடம் காட்டும். அதன் பிறகு பாரும். அன்பினால் எல்லாம் நடக்கும் “ என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார் அந்த ஞானி.

அவர் சொன்னபடியே செய்தார் செல்வந்தர். அவர் அன்பில் திளைத்தது குதிரை. அதன் பிறகுதான் அந்த மாயம் நடந்தது.

அதன் பிறகு அந்தக் குதிரை அவர் சவாரி செய்யும்போது எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அவரை மகிழ்ச்சியுடன் சுமந்து சென்றது குதிரை.





டிஸ்கி:

அரசாங்கப் பணி என்றாலே உங்களுக்குத் தெரியும். அதை விட நான் வேலை பார்க்கும் காவல்துறையைப் பற்றி கேட்கவே வேண்டாம். டிசம்பர் மாதம் வந்தாலே எனக்கு அலுவலகப் பணிகள் கழுத்தைப் பிடித்து விடும். பிசியான வேளைகளிலும் ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு பதிவுகளையும் பின்னூட்டங்களையும் இட்டு வருகிறேன். ஜனவரியிலிருந்து மறுபடியும் எல்லா பதிவுகளுக்கும் வழக்கம் போல வந்து பின்னூட்டம் மற்றும் வாக்குகள் இடுவேன். ஆகவே அன்பர்கள் என்னுடைய வருகையின்மையையும் பின்னூட்டம் இடாமையையும் பொறுத்தருள வேண்டும்.




.

Monday, December 26, 2011

பட்டதாரி இளைஞர்கள்





தேடித் தேடி சேகரித்து
விதைக்கப்பட்டன
விதைகள்
தோட்டமெங்கும்

புழு வந்தது
பூச்சி வந்தது

தேள் வந்தது
பாம்பும் வந்தது

செடிகள் மட்டும்
வரவில்லை
வரவே இல்லை…….!






.

Thursday, December 22, 2011

ஒரு நதியின் அழுகை




என் பிறந்த ஊரின் வழியாய்ப்
பிரயாணப்பட்டபோது

என் ஞாபகச் சில்லறைகள்
தெறித்துச் சிதறின


*****

ஏரல்
இதுதான் நான் பிறந்த ஊர்
தென்தமிழகத்தின் கடையோரமாய்
வயல்களோடும் வயல்வெளி நிலங்களோடும்
நீண்டு கிடக்கிறது
அந்த
பசுமை பூமி

*****

அந்த நாட்களில்
என் வசந்த ருதுக்களில்
என் தோழமையாய் இருந்ததெல்லாம்
அந்த நதி
தாமிரபரணி.

*****

அந்த நதித்தோழியோடுதான்
செலவழிந்தன
என் நேரச் சில்லறைகள்

*****


நீண்ட அந்த
வெண்மணற்பரப்புதான்
அவளின்
கூந்தல்

அந்தக் கூந்தலில்தான்
என் கூடுகள் இருந்தன.

*****

எனக்கான
அவளின் கதைகளும்
அவளுக்கான
என் கதைகளும்
அங்குதான் பறிமாறிக்கொள்ளப்பட்டன

*****

அதிகாலைகளில்
அவளை
நான்
முத்தமிடும்போதெல்லாம்
சிலிர்ப்படைந்து
தெளிப்பாளே
அந்த
நீர்த்திவலைகளில்தான்
என் பரவச நிமிடங்கள்
கரைந்து கிடக்கின்றன.

*****

அவளுக்குள் நான்
மூழ்கி எழும்போதெல்லாம்
பாய்ந்து பரவுமே
அமுத விஷம்

அதுவே
என் கவலைக் கிருமிகளை
அழித்தொழிக்கும்
மாமருந்து

*****

என் சொர்க்கநாட்களை
சேகரிக்க கற்றுத்தந்ததும்
அவள்தான்

என் நரக நாட்களை
அழித்துப்போடக் கற்றுத் தந்ததும்
அவள்தான்

*****

அவள் காதோரங்களில்
முளைத்திருக்கும்
அந்த நாணல் சீப்புகளில்தான்

என் பிரச்சினை முடிகளை
சீவியிருக்கிறேன்

*****

இன்று……

பேருந்தைவிட்டு இறங்கி
ஊர் எல்லையைக் கடந்து
நடக்கிறேன்

என் தோழியைக் காண…..


*****


அங்கு நான் கண்ட காட்சி.....

ஆள் மெலிந்திருந்தாள்
அய்யோ பாவம் என்றிருந்தாள்

அவளின் வனப்பை
காலம் திருடியிருந்தது

அவளின் கூந்தல்
வெட்டப்பட்டிருந்தது

அவளின் மரப்பூக்கள்
பறித்தெறியப் பட்டிருந்தன


*****


அவளுக்கான
என் கதைகள்
அப்படியேதான் இருக்கின்றன

எனக்கான
அவள் கதைகளில்தான்
கருச்சிதைவு ஏற்பட்டிருந்தது


*****

தன் நீர்க்கரங்களால்
என்னை அணைத்துக்கொண்டு
கதறினாள் என் தோழி

*****



போரினால் பாதிக்கப்பட்ட
நாடு போல் இருக்கிறது
என் இதயம்


சிந்தித்துக் கொண்டே
இருக்கிறேன்
அங்கு போகாமலே
இருந்திருக்கலாமோ என்று……….

********








.

Wednesday, December 21, 2011

மீசைக் கனவுகள்



இரவின் நீட்சிகள்
நீளும்
ஒவ்வொரு நொடிகளிலும்

நீண்ட கனவுகள்…..

அரச கனவுகள்
ஆண்டி கனவுகள்
ஆசை கனவுகள்
மீசைக் கனவுகள்

கனவுகள்தோறும்
நாடகங்கள்
எல்லா நாடகங்களிலும்
கோமாளியாய்.....
நான்

என் கனவுகள்தானே
ஏன் இப்படி?

சிரிக்கிறது
நிஜம்.





.

Tuesday, December 20, 2011

என் கோட்டோவியம்

யாரேனும் பார்த்தீர்களா
என் கோட்டோவியத்தை

அது
தொலைந்து போயிற்று

என் நேரங்களைத் தின்றுதான்
அந்த ஓவியம் கொழுத்தது

கோடுகளல்ல அவை
என் பொழுதுகள்

விற்பனைக்குத்தான் என்றால்
திரும்பக் கொடுத்துவிடுங்கள்

பதிலுக்கு
என்னையே தந்து விடுகிறேன்

ஏனென்றால்
அந்த ஓவியத்தில்தான்
நான் வாழ்கிறேன்

முற்றுப்பெறாத அந்த
ஓவியத்திற்குள்

ஓர் காவியம் இருக்கிறது.
.

Monday, December 19, 2011

பதிவர் சங்கம் தேவையா?

பதிவர் சங்கம் தேவையா
கேட்கிறது ஒரு கூட்டம்

தங்கத்தையும்
சங்கத்தையும்
நிறுக்கும் தராசின் முள்

சங்கம் பக்கமே சாயும்
என்பதை உலகறியும்

போரில்லா காலங்களில்
போராயுதங்களுக்கு அவசியமில்லைதான்

ஆனால்
போர் வந்துவிட்டால்.....
என்பதுதான் எங்கள் கேள்வி

ஊறுகாய் கெட்டுவிடவா போகிறது
என்கிறீர்கள் நீங்கள்

சாப்பாடே கெட்டுவிட்டால்.....
என்பதுதான் எங்கள் கேள்வி

பல்லக்கை
முன்னெடுத்து செல்கிறார்
புலவர் ஒருவர்

பாதையெங்கும் முள்ளெடுத்து
தூவுகிறீர்கள் நீங்கள்

விதைகளையெல்லாம்
அழிக்கிற கூட்டம் ஒன்று
காலம்தோறும்
இருக்கிறதால்தான்

பல சரித்திரங்களும்
சமாதிகளாயின

கருவிலிருக்கும்போதே
கழுத்தை நெறிக்காதீர்கள்

வளரட்டும் அவன்
அப்போது
மோதிப்பாருங்கள் !.....
.

Saturday, December 17, 2011

போபியா (Phobia), பயம் என்ன வேறுபாடு? - மருத்துவரீதியான ஓர் அலசல்

நண்பர் பிலாசபி பிரபாகரன் (Philosophy Prabhakaran) அவர்கள் என்னுடைய பதிவு ஒன்றில் பின்னூட்டத்தில் போபியாக்கள் பற்றி நீங்கள் பதிவொன்றை இட வேண்டும். இது வாசகர் விருப்பமாகும் என்று தெரிவித்திருந்தார். என்னுடைய கடுமையான அலுவலகப் பணி நெருக்கடி காரணமாக அது இத்தனை நாள் தள்ளிப் போயிற்று. இன்றுதான் அதற்கு சமயம் வாய்த்தது. அவருடைய விருப்பத்திற்கிணங்கவும் வாசகர்கள் தெரிந்துகொள்வதற்காகவும் போபியாக்கள் (Phobias) பற்றி இன்று கொஞ்சம் அலசலாம்.

போபியா என்றால் என்ன? போபியாவின் வகைகள் என்ன?

சிலர் நினைத்துக்கொண்டிருக்கலாம் போபியா என்பது பயம்தான் என்று. இல்லை. போபியா என்பது வேறு. பயம் என்பது வேறு. பயம் என்பது இயல்பானது. போபியா என்பது அசாதாரணமான பயம். அளவுக்கு மீறிய பயம். சுருக்கமாக சொன்னால் இயற்கைக்கு மாறான பேரச்சம் என்று சொல்லலாம்.

பயம் அவசியம். போபியா அநாவசியம். ஆனால் வாழ்க்கையில் நேரிடும் சில அசாதாரண சம்பவங்களினால் சிலர் இந்த போபியாக்களை தங்களுக்குள்ளே உருவாக்கிக் கொள்கிறார்கள். இது ஒரு மனநோய்தான். வேறு பயப்படும்படி ஒன்றுமில்லை. சில போபியாக்கள் ஆபத்தானவை.

ஆகவே போபியா என்பது இயற்கைக்கு மீறிய பேரச்சம் எனப்படுவதாகும்.
நூற்றுக்கணக்கான போபியா வகைகள் இருக்கின்றன. அகர வரிசைப்படி A- எழுத்தில் தொடங்கும் போபியாக்கள் பட்டியலை மட்டும் கீழே கொடுத்துள்ளேன். இன்னும் B யிலிருந்து Z வரைக்கும் எவ்வளவு இருக்கும் பாருங்கள். வேண்டாம். தலை சுற்றும். நாம் நேரடியா மேட்டருக்கு வருவோம். பொறுமையில்லாதவர்கள் பட்டியலை ஒரேத் தாவாக தாவிவிடுங்கள்.

Ablutophobia- Fear of washing or bathing.
Acarophobia- Fear of itching or of the insects that cause itching.
Acerophobia- Fear of sourness.
Achluophobia- Fear of darkness.
Acousticophobia- Fear of noise.
Acrophobia- Fear of heights.
Aerophobia- Fear of drafts, air swallowing, or airbourne noxious substances.
Aeroacrophobia- Fear of open high places.
Aeronausiphobia- Fear of vomiting secondary to airsickness.
Agateophobia- Fear of insanity.
Agliophobia- Fear of pain.
Agoraphobia- Fear of open spaces or of being in crowded, public places like markets. Fear of leaving a safe place.
Agraphobia- Fear of sexual abuse.
Agrizoophobia- Fear of wild animals.
Agyrophobia- Fear of streets or crossing the street.
Aichmophobia- Fear of needles or pointed objects.
Ailurophobia- Fear of cats.
Albuminurophobia- Fear of kidney disease.
Alektorophobia- Fear of chickens.
Algophobia- Fear of pain.
Alliumphobia- Fear of garlic.
Allodoxaphobia- Fear of opinions.
Altophobia- Fear of heights.
Amathophobia- Fear of dust.
Amaxophobia- Fear of riding in a car.
Ambulophobia- Fear of walking.
Amnesiphobia- Fear of amnesia.
Amychophobia- Fear of scratches or being scratched.
Anablephobia- Fear of looking up.
Ancraophobia- Fear of wind. (Anemophobia)
Androphobia- Fear of men.
Anemophobia- Fear of air drafts or wind.(Ancraophobia)
Anginophobia- Fear of angina, choking or narrowness.
Anglophobia- Fear of England or English culture, etc.
Angrophobia - Fear of anger or of becoming angry.
Ankylophobia- Fear of immobility of a joint.
Anthrophobia or Anthophobia- Fear of flowers.
Anthropophobia- Fear of people or society.
Antlophobia- Fear of floods.
Anuptaphobia- Fear of staying single.
Apeirophobia- Fear of infinity.
Aphenphosmphobia- Fear of being touched. (Haphephobia)
Apiphobia- Fear of bees.
Apotemnophobia- Fear of persons with amputations.
Arachibutyrophobia- Fear of peanut butter sticking to the roof of the mouth.
Arachnephobia or Arachnophobia- Fear of spiders.
Arithmophobia- Fear of numbers.
Arrhenphobia- Fear of men.
Arsonphobia- Fear of fire.
Asthenophobia- Fear of fainting or weakness.
Astraphobia or Astrapophobia- Fear of thunder and lightning.(Ceraunophobia, Keraunophobia)
Astrophobia- Fear of stars or celestial space.
Asymmetriphobia- Fear of asymmetrical things.
Ataxiophobia- Fear of ataxia. (muscular incoordination)
Ataxophobia- Fear of disorder or untidiness.
Atelophobia- Fear of imperfection.
Atephobia- Fear of ruin or ruins.
Athazagoraphobia- Fear of being forgotton or ignored or forgetting.
Atomosophobia- Fear of atomic explosions.
Atychiphobia- Fear of failure.
Aulophobia- Fear of flutes.
Aurophobia- Fear of gold.
Auroraphobia- Fear of Northern lights.
Autodysomophobia- Fear of one that has a vile odor.
Automatonophobia- Fear of ventriloquist's dummies, animatronic creatures, wax statues - anything that falsly represents a sentient being.
Automysophobia- Fear of being dirty.
Autophobia- Fear of being alone or of oneself.
Aviophobia or Aviatophobia- Fear of flying.

அமெரிக்காவில் மட்டும் 6 மில்லியன் மக்கள் ஏதேனும் ஒரு போபியாவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. எல்லா நாடுகளிலுமே 7 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை மக்கள் ஏதோ ஒரு போபியாவினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று மற்றொரு புள்ளிவிபரம் கூறுகிறது.


சிலர் திறந்த வெளியிலோ பொதுமக்கள் மத்தியிலோ போவதற்கும் பேசுவதற்கும் பயப்படும் போபியாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். மாறாக சிலர் தனிமையிலே இருப்பதற்கு பயப்படும் போபியாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். சிலருக்கு இருட்டைக் கண்டால் பயம். பகலில் கூட வீட்டிலே தனியாக இருக்க பயப்படுவார்கள். சிலருக்கு இரத்தத்தைக் கண்டதும் மயக்கமே வந்துவிடும். சிலருக்கு பாம்பு, பல்லி, கரப்பான் பூச்சி, தேள் போன்றவற்றைக் கண்டவுடனே மயக்கம் போட்டு விழுந்து விடுவார்கள். சிலர் உயரமான கட்டிடங்கள், மலை போன்றவற்றைக் கண்டதும் அலறுவார்கள். சிலர் கிருமிகள் கிருமிகள் என்று அளவுக்கு மீறி பயந்து நடுங்குவார்கள். ஒரு நாளைக்கு நூறு முறை கைகளைக் கழுவுவார்கள். ஒன்றும் வேண்டாம். ஹெல்மட்டைக் கண்டாலே அலறும் போபியாவினால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவ சரித்திரத்திலே உண்டு. ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?.

போபியாவினால் எவ்விதம் பாதிப்பு உண்டாகிறது?

பயம் என்பது இயற்கைதான். ஆனால் அளவுக்கு மீறிய பயம்தான் போபியாவாகும். உதாரணமாக நீங்கள் கார் அல்லது பைக் ஓட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு மலைப்பகுதியில் பெரிய மேட்டைக் கடந்து போக வேண்டி இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். ஆரம்பத்தில் இலேசாக இருக்கும் பயம் நாளடைவில் டிரைவிங்கே வேண்டாம் என்று முடிவெடுத்து விடுகிறீர்கள் என்றால் அங்கேதான் அது போபியா எனப்படுகிறது. இது நமக்கு மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பிரச்சினையை உண்டாக்குகிறது. சிலருக்கு இந்த போபியாவினால் அளவுக்கு மீறி பிரச்சினை ஏற்பட்டு இதய வியாதி வரை கொண்டு போய்விடும். ஒரு தடவை நாய் பயத்தினால் நீங்கள் பாதிக்கப்படும் போது நல்ல நாயைக் கண்டாலும் அலறி ஓடுவீர்கள். நீங்கள் ஓடும் போது நாயும் துரத்தத்தானே செய்யும்?!!!...

போபியாவின் அறிகுறிகள் என்னென்ன?

போபியா ஏற்பட்டிருக்கிறது என்றால் சில அறிகுறிகள் உண்டாகும். அளவுக்கு மீறிய அச்ச உணர்வினால் உடல் நடுங்குவது, வியர்ப்பது, மூளைச் சோர்வு, மூக்கு ஒழுகல், இதயத்துடிப்பு அளவுக்கு மீறுவது, சுவாசிக்கவே திணறுவது போன்ற உணர்வுகள்தான் போபியாவினால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகளாகும்.

எப்படி குணமாக்குவது?

தகுந்த நல்ல மனோதத்துவ சிகிச்சை நிபுணரிடம் காண்பித்து குணமடையலாம். ஒருவர் மூன்று விதங்களாய் பாதிக்கப்பட்டிருக்காலம். 1. Generalized Anxiety Disorder (GAD), 2. Obsessive Compulsive Disorder (OCD), 3. Post-Traumatic Stress Disorder (PTSD) என்ற மூன்று விதங்களில் பாதிக்கப்பட்டிருக்கலாம். பாதிப்பின் விதத்தைப் பொறுத்து சிகிச்சை அளிப்பார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.

fluoxetine (Prozac), sertraline (Zoloft), paroxetine (Paxil), fluvoxamine (Luvox), citalopram (Celexa), and escitalopram (Lexapro) என்று நிறைய மருந்துகள் உள்ளன. இதற்கு மேலும் நான் சொன்னால் நீங்கள் என்னை அடிக்க வருவீர்கள். எல்லாம் வாயில் நுழையாத மருத்துவச்சொற்கள்.
இன்னும் இந்த போபியாக்களைப் பற்றி ஏராளம் சொல்லலாம். ஆனால் தனிப் புத்தகமே போடவேண்டும். நண்பர் பிலாசபி பிரபாகரனே வருத்தப்பட்டு விடுவார். அட ஒரு பேச்சுக்குச் சொன்னா இந்த ஆளு இவ்வளவு ரம்பம் போடுறாரே அப்படின்னு கூட சொல்லிவிடலாம். ஆகவே இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் இவ்வித போபியாக்களினால் பாதிக்கப்பட்டிருப்பார்களானால் தகுந்த மனோதத்துவ நிபுணரிடம் காண்பித்து சிகிச்சை அளியுங்கள்.
நலமுடன் வாழ்க!.

Wednesday, December 14, 2011

நான் நிறமில்லாதவன்

நான் நிறமில்லாதவன்
நிறங்களை நிறைய கொண்டிருந்தும்
நான் நிறமில்லாதவன்

நிறங்களோடு வாழ்ந்தபோது
நிராகரித்த உலகம்
நிறமில்லாத வாழ்க்கையை
வரவேற்கிறது

ஏனென்றால்
நிறங்களோடு வாழ
இவ்வுலகம் விரும்புகிறது

நிறங்களோடு வாழ்பவனை
வெறுக்கிறது

ஆகவேதான்
நிறமில்லாமல் வாழ்கிறேன்.
.

Tuesday, December 13, 2011

நல்ல வியர்வையும் கெட்ட வியர்வையும் (Healthy Sweat and Unhealthy Sweat)– ஒரு மருத்துவரீதியான அலசல்.

வியர்வையில் கெட்ட வியர்வை நல்ல வியர்வை என்று இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம். பதில் ஆம் இருக்கிறது என்பதுதான். இதைப் பற்றி கொஞ்சம் அலசலாம். உங்கள் முதுகு மற்றும் மார்பு இவற்றைவிட உங்கள் உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், நெற்றி ஆகிய இடங்களில் மிகுதியான வியர்வை சுரப்பிகள் உண்டு. வயதாகும்போது முதலில் முதுமை அடையும் வியர்வைச் சுரப்பிகள் நம் கால்களில் உள்ள வியர்வை சுரப்பிகளாகும். வெப்பமான இடங்களில் அல்லது நேரடியாக சூரியஒளி தாக்கும் இடங்களில் வேலை பார்க்கும் நபர்கள் தங்கள் கால்களில்தான் முதலில் வெப்பத்தை உணருகிறார்கள்.

கடுமையான சூரியஒளித் தாக்குதல் மூலம் நம்முடைய கால்களில்தான் முதலில் தாக்குதல் உண்டாகி வலியும் அயர்ச்சியும் ஏற்படுகிறது. ஒரு ஆராய்ச்சி முடிவு இப்படி கூறுகிறது. 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக நீராவிக்குளியல் அல்லது வெந்நீர்க் குளியல் எடுப்பவர்கள் மற்றவர்களை விட அதிகமாக வியர்க்கிற தன்மையை அடைந்தார்கள் என்று.
அவர்களின் வியர்வைத்துளிகளை கிண்ணங்களில் பிடித்து உலர வைத்தபோது சிலருடைய வியர்வைத்துளிகள் விரைவில் உலர்ந்து விட்டதாகவும், சிலருடைய வியர்வைத்துளிகள் உலராமல் வெகுநேரம் ஈரப்பதத்துடன் இருந்ததாகவும் அந்த ஆராய்ச்சி சொல்கிறது. அப்படியானால் என்ன அர்த்தம்?

மருத்துவ விஞ்ஞானம் என்ன சொல்கிறது?
ஒருவருக்கு எப்படி வேர்க்கிறது என்பது அவருடைய உடல்நலத்தின் தன்மையை காண்பிக்கிறது. அவருடைய உடலின் நீர்த்தன்மையானது எப்படி அவருடைய தோலினால் சமன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து அவருடைய உடலின் ஆரோக்கியத்தையும் மதிப்பிட்டு விடலாம்.

வெப்பத்தில் அல்லது சூரிய ஒளியில் இருந்தும் ஒருவருக்கு சரியாக வேர்க்காதே போனால் அவருடைய உடல் ஆரோக்கியம் கெட்டிருக்கிறது என்பதுதான் பொருளாகும். அவருடைய வேர்வையில் உள்ள அமிலமானது நீர்த்தன்மை இல்லாமல் கெட்டிப்பட்டு விடுவதுதான் இப்படி வேர்க்காமல் போவதற்கான காரணமாகும். அதாவது அவருடைய தோல் மற்றும் உடல் இயக்கம் அவருடைய உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது இந்நிகழ்வு ஏற்படுகிறது.

கெட்ட வியர்வை என்பது அதிகமான அமிலத்தையும், கொழுப்பையும் கொண்டிருக்கும் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் உலகமெங்கும் ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு சூரிய ஒளியினால் அல்லது வெப்பத்தினால் மரணடைகிறார்கள். நீங்கள் வெப்பம் மிகுந்த நாட்டில் அல்லது இடத்தில் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு வியர்க்க வேண்டும். இந்த உடலின் செயலானது (Body Mechanism) நம்முடைய மூளையினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

நம்முடைய மூளையானது தோலினருகில் அமைந்திருக்கும் வியர்வைச் சுரப்பிகளின் மூடித்திறத்தல் வேலையைக் (Close and Open) கட்டுப்படுத்தி அமிலத்தை சுரக்கவைத்து வியர்வையாக மாற்றி தோலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது. வியர்க்காத மனிதர்களின் உடலில் இந்த வியர்வை இயக்கத்தில் கோளாறு இருக்கிறது என்று அர்த்தமாகும். கெட்ட வியர்வையினால் இரத்தமானது கெட்டிப்பட்டு விடுகிறது. நம்முடைய இரத்தத்தில் மற்றும் உடலில் சுரக்கும் மற்ற திரவங்களில் கடல் நீரில் உள்ளதைப்போலவே உப்பு கலந்த தண்ணீர் உள்ளது. இந்த உப்பானது நம்முடைய தசைகளும் மற்ற உறுப்புகளும் ஆரோக்கியமாக இயங்க அவசியமாகும்.

நமக்கு சுளுக்கு ஏன் ஏற்படுகிறது தெரியுமா?

நம்முடைய உடலில் இந்த உப்புத்தன்மை போதுமானதாக இல்லாத சமயங்களில்தான் இந்த சுளுக்கு ஏற்படுகிறது. நம்முடைய இரத்தத்தில் உள்ள பொருட்களின் சேர்மானங்களின் அளவை இந்த உப்புதான் கட்டுப்படுத்துகிறது. இந்த உப்பின் அளவு மிகவும் அதிகரிக்கும்போதும் பிரச்சினை ஏற்படுகிறது. இதன் அளவு மாறுபாடுதான் தேவையில்லாத இரசாயனப் பொருட்களை இரத்தத்தில் அதிகளவு உற்பத்தி செய்துவிடுகிறது.

சிலருக்கு தாகம் ஏற்படும்போது தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்க மறுக்கிறது. காரணம் இந்த உப்புத்தன்மை அளவு மாறுபடுவதுதான். தண்ணீர் குடித்தாலும் அதை நம் உடல் உட்கிரகிக்க முடியாமல் போவதால் தண்ணீர் அதன் வேதிப்பொருட்களோடு நம்முடைய சிறுநீராக மாறி சிறுநீர்த்துவாரம் மூலமாக வெளியேறுகிறது. நம்முடைய உடலானது ஒழுங்காக வியர்வையை சுரக்குமானால் வியர்வை சுரப்பிகள் குடிக்கும் தண்ணீரிலிருந்து உப்பை ஒழுங்காக உறிஞ்சி விடுகின்றன. அந்த உப்புதான் வியர்வை வெளியேறுவதை நிர்ணயிக்கிற சமாச்சாரமாய் இருக்கிறது.

எல்லாம் ஒழுங்காய் நடக்கும்போது வியர்வை மட்டும் நீர் போல வியர்வைத்துவாரங்கள் மூலம் நம் தோலில் வெளியேறுகிறது. இது நல்ல வியர்வையாகும்.

மாறாக இதில் கோளாறு ஆகும்போது உடலில் உள்ள வேறு இராசயன கூட்டுப்பொருட்களும் (Various Salt Compounds and other Minerals) வியர்வையோடு சேர்ந்து வியர்வைத் துவாரங்களின் வழியாக வெளிவருகிறது. இதுவே கெட்ட வியர்வை எனப்படுகிறது.


சரி. இந்த வியர்வைக் கோளாறை அதாவது கெட்ட வியர்வையைத் தடுக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

ஆம். இருக்கிறது. மிக எளிதான வழிதான் மருந்து மாத்திரை எதுவும் தேவையில்லை. உடற்பயிற்சிதான் அந்த வழி. கடுமையான உடற்பயிற்சிகள் அல்ல. எளிதான ஆனால் உடல் வேர்க்கும்படியான நடைப்பயிற்சியோ அல்லது உடற்பயிற்சியோ தினமும் 20 அல்லது 30 நிமிடங்கள் செய்தால் போதும் இந்த கெட்ட வியர்வை நாற்றத்திலிருந்து விடுதலை பெறலாம்.

கெட்ட வியர்வை நாற்றங்கள் உள்ளவர்கள் இவ்வாறு உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே மாற்றம் தெரியும். உடற்பயற்சி செய்து முடித்த உடனேயே வெளிவரும் வியர்வையைக் கவனியுங்கள். முதலில் கொழுப்பு போல நிறமுடைய கெட்ட வியர்வை எண்ணெய் போன்று வெளியேறும். நாளாக நாளாக வியர்வையின் நிறம் மாற ஆரம்பிக்கும். நாளடைவில் சுத்தமான தண்ணீர் போன்று நிலைமை வருகிற வரைக்கும் நீங்கள் உடற்பயிற்சியைத் தொடர வேண்டும். (அதன் பிறகும் தொடர்ந்தாலும் நல்லதுதானேங்க.). கொழுப்பும் குறையும். தொந்தியும் குறையுமல்லவா? உடற்பயிற்சியினால் எவ்வளவு நன்மை பார்த்தீர்களா? இன்றைக்கே தொடங்கி விடுங்கள்.

கெட்ட வியர்வையோடுதான் வாழுவேன் என்று நீங்கள் அடம் பிடித்தால் அவ்வளவுதான். நாளடைவில் இரத்தத்தின் உப்பைக் கட்டுப்படுத்துகிற தன்மை மாறுகிறதினால் ஹார்ட் அட்டாக் வர மிகுந்த வாய்ப்பிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள்தான் சூரிய ஒளித்தாக்குதலினால் மரணமடைகிறார்கள். இப்போது காரணம் புரிகிறதா?

“ வியர்வை சாதாரணமானதல்ல. அது நம் உடலின் ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடி” என்பதை ஒருநாளும் மறவாதிருங்கள்.

நலமுடன் வாழ்க!.
.

Saturday, December 10, 2011

தீர்ப்புகள் திருத்தப்படும்

(முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையினால் மனம் நொந்து நான் எழுதிய கவிதை இது)

சிலந்திவலைகளாய்
ஆயிரம் பிரச்சினைகள் இருக்க

அணைப் பிரச்சினையை
ஏனய்யா எடுத்தீர்கள்
எங்கள் தேசத்து அரசியல்வாதிகளே

பூமித்தாயின் தலையில்
ஏன் ஆணி அடிக்கிறீர்கள்

நீங்கள் அடிக்கும்
ஒவ்வோர் ஆணியும்

திரும்பவில்லையா
பூகம்பங்களாய்....

நாய்களோடு விளையாடலாம்
நதிகளோடு விளையாடலாமா

இயற்கையை
கூறுபோட்டு
கூறுபோட்டு
விற்பனை செய்ததினால்தான்

இன்று
நம் வாழ்க்கையும்
கடைவீதியில்…

சோறு போடாவிட்டாலும்
பரவாயில்லை
எங்களை
கூறுபோடாதீர்கள்

அணை கட்டுவது தவறல்ல
அதற்கு
எங்கள் வாழ்க்கையை
ஏன் அஸ்திபாரமாக்குகிறீர்கள்

எங்கள் கேள்விகளை
நீங்கள்
அலட்சியப்படுத்தலாம்

எங்கள் வேள்விகளை
நீங்கள்
அலட்சியப்படுத்த முடியாது

அவ்வேள்வியில்
உங்கள் தாறுமாறுகள்
தகடுபொடிகளாகும்

தீர்ப்புகள் திருத்தப்படும்போது
ராஜ்ஜியங்களும் நகர்ந்துவிடும்
என்பதை நினைவில் வையுங்கள்

இப்படியே போனால்
இந்திய வரலாறு
திரும்பவும் எழுதப்படும்
வரலாற்றின் வண்ணங்களும்
மாற்றப்படும்

புதிய இந்தியாவிற்காக
எதையும் செய்யும்
எங்கள் கூட்டம்.
.

Thursday, December 8, 2011

மானுடம் பாடும் கவிதை

இது மானுடம் பாடும் கவிதை
காதல் காமம் தாண்டிய
கவிப்பயணம்

இது என் தவவேள்வி
வேகாதவைகளும் வெந்து விடும்
ஆகாதவைகளும் அவிந்து விடும்
அக்கினிக் குண்டம் இது

நான்
கோமாளிக் கூத்துக்கு
கவிபாட வரவில்லை
அடைபட்டிருக்கும் குயில்களின்
தொண்டைதிறக்க
கூவுகிறேன் உரக்க

என் பூபாளம்
பூமிவரை மட்டுமல்ல
அதற்கும் கீழே

என் வாணவேடிக்கை
வானம் வரை மட்டுமல்ல
அதற்கும் மேலே

வாசல்வரை வந்து
கூவிவிட்டு ஓடிவிடும்
சேவலல்ல நான்

உங்கள் வீட்டிற்குள்ளே வந்து
எக்காள சத்தமிடும்
ஏகாந்தப்பறவை
நான்

என் சிறகுகளில்
ஏறிக்கொள்ளுங்கள்

ஏனென்றால்
இது உலகப் பயணமல்ல
பிரபஞ்சப் பயணம்.
.

Tuesday, December 6, 2011

வியாதியின்றி வாழ சில ஆலோசனைகள்

நம்முடைய நவீன மருத்துவ விஞ்ஞானம் தலைசிறந்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் ஏன் பெருகி வரும் புதுப்புது வியாதிகளை நம்முடைய மருத்துவ விஞ்ஞானத்தால் குணப்படுத்த முடியவில்லை. ஏன் அவை தொடர்ந்து பெருகுகின்றன? வியாதியில்லாமல் வாழ முடியாதா? என்ற பல கேள்விகளுக்கு பதிலாக இந்த சின்ன அலசல்.

உதாரணமாக இந்த அலர்ஜியை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த அலர்ஜியில்தான் எத்தனை வகை? உணவு அலர்ஜி, உலோக அலர்ஜி, ஆஸ்துமா, தாவரங்களினால் உண்டாகும் அலர்ஜி, விலங்குகளினால் உண்டாகும் அலர்ஜி என்று எத்தனை விதவிதமான அலர்ஜிகள் இருக்கின்றன பாருங்கள். இவ்வகை அனைத்து அலர்ஜிக்களையும் நம்முடைய நவீன மருத்துவ விஞ்ஞானத்தால் முற்றிலும் குணமாக்க இயலுகிறதா என்ற கேள்விக்கு இல்லை என்பதே நடைமுறை உண்மையாக இருக்கிறது.

நவீன நுண்ணோக்கி (Microscope) மூலம் கண்ணோக்கினால் மில்லியன் கணக்கான வைரஸ்களும், பாக்டீரியாக்களும் காற்றிலும் தண்ணீரிலும் நம்மைச் சுற்றிலும் எங்கும் நிறைந்திருக்கிறதை நாம் காணலாம். இவற்றில் பாதியையேனும் நம்முடைய நவீன மருத்துவ விஞ்ஞானத்தால் கண்டுபிடிப்பதே சிரமமாயிருக்கிறது. பிறகு எப்படி இவற்றிற்கு சிகிச்சை அளிப்பது? இவற்றிற்கு என்னதான் தீர்வு?

பல வருடங்களுக்கு முன்னே பார்த்த அதே பாக்டீரியாக்களும் வைரஸ்களும் இப்போது தங்கள் கட்டமைப்பில் மாறியிருக்கின்றன. இதைக் கண்டு விஞ்ஞான உலகம் வாயடைத்துப் போய் இருக்கிறது. இதைக் கண்டுபிடிக்க விதவிதமாய் ஆராய்ச்சிகள் பரபரப்பாய் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊதாரணமாக இந்த பன்றி காய்ச்சல் வைரஸை எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் இவற்றை முற்றிலும் குணமாக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. கட்டுப்படுத்த வேண்டுமானால் செய்யலாம். எய்ட்சும் அப்படித்தான்.

இந்த பூமிக்கு என்னதான் நேர்ந்துவிட்டது?
அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கின்றனர். இவ்வளவு மருத்துவ வசதிகள் இல்லாத அக்காலத்தில் எப்படி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்? தொடர்ந்து வாசியுங்கள்.

இந்த காலத்தில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதற்கான சிறிய பட்டியல் கீழே.

1.எவ்வித மருந்துகளுக்கும் கட்டுப்படாத கிருமிகள்
2.கிருமிகளில் உட்கட்டமைப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்
3.காய்கறிகளும், பழங்களும் தங்கள் சத்துக்களில் ஏற்பட்டுள்ள
குறைபாடுகள்
4.சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு.

நல்ல ஆரோக்கியமாக வாழ வழியில்லாமல் இந்த பூமி கேடடைந்து வருகிறது. ஆனால் இவற்றிலிருந்து தப்பித்து நிம்மதியாக ஆரோக்கியமாக வாழ வழியில்லையா என்ற ஆதங்கத்திற்கு பதில் உண்டு. என்ன வழி என்று கேட்கிறீர்களா?

நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதுதான் அந்த வழி. என்ன அந்த பழைய கால வாழ்க்கை முறை நமக்கு சரிப்பட்டு வருமா என்று சந்தேகப்படுபவர்கள் தொடர்ந்து வாசியுங்கள்.

நம்முடைய வாழ்க்கை முறைக்கும் நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன?
முதலில் நம்முடைய மனஆரோக்கியத்துக்கும் அவர்களின் மனஆரோக்கியத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போம்.

நாம் அடிக்கடி கவலைப்படுகிறோம். நம்முடைய வீட்டைக்குறித்து, மனைவி பிள்ளைகளைக் குறித்து, வேலையைக்குறித்து, சுற்றுப்புறச் சூழலைக் குறித்து, நம்முடைய உணவு முறைகளைக் குறித்து மிகவும் கவலைப்படுகிறோம். இவைகளினால் உண்டாகிற மனஅழுத்தம்தான் நமக்கு பல வியாதிகளை உண்டுபண்ணுகிறது. நம்முடைய மூதாதையர்களுக்கு சில பிரச்சினைகளே இருந்தன. அதனால் மகிழ்ச்சியாய் வாழ்ந்தார்கள். ஆனால் நமக்கு நவீன விஞ்ஞானமும், நவீன மருத்துவமும் பலப்பல பிரச்சினைகளையும், வியாதிகளையும் உண்டுபண்ணுகின்றன.

அடுத்து உணவு முறைகளைப் பற்றிப் பார்ப்போம். உணவுமுறைகளில் நாம் எவ்விதங்களில் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது என்று பார்ப்போம். கீழே உள்ள பட்டியலைக் காணுங்கள்.

1.பேக்கேஜிங் செய்யப்பட்ட உணவுப்பொருட்களையோ பானங்களையோ
வாங்கி பயன்படுத்த கூடாது.

2.பாலீதீன் பைகளையோ, பிளாஸ்டிக் பொருட்களையோ
பயன்படுத்துவதை தவிருங்கள்.

3.சமையலில் மிச்சமான பொருட்களினால் மறுசுழற்சி முறையில் உணவுப்
பொருட்களை உண்டாக்குவதை தவிருங்கள். நேற்று உள்ள மீதி
உணவானாலும் சரி. பயன்படுத்தாதீர்கள்.

4. உங்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்களை நீங்களே வீட்டுத்தோட்டம் அமைத்து பயிரிட்டு அதை சாப்பிடப் பழகுங்கள். அல்லது அவ்வித காய்கறிகள், பழங்கள் விற்கும் தரமான கடைகளை விசாரித்து வாங்கி பயன்படுத்த ஆரம்பியுங்கள். வீட்டுத்தோட்ட பராமரிப்பு நம்முடைய மனதிற்கும் ஒரு இனிமையான அனுபவம் தந்து மனஅழுத்தத்தைக் குறைக்கிறது.

நம்முடைய முன்னோர்களின் ஆயட்காலத்தை ஒப்பிடும்போது நம்முடைய ஆயட்காலம் அதிகம்தான். நவீன மருத்துவம் இதைச் சாதித்தது உண்மைதான். ஆனால் அவர்கள் கொஞ்சகாலம் வாழ்ந்தாலும் நிம்மதியோடும் வியாதிகள் இல்லாமலும் வாழ்ந்தார்கள். நாம் அப்படியா வாழ்கிறோம்? !...

காரணம் மன அழுத்தம்தான். மன அழுத்தமானது நம்முடைய இரத்தத்தில் ஒருவித அமிலத்தை (Acid causing stress) உற்பத்தி செய்கிறது. அது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து நம்மை பலவீனர்களாக்கி விடுகிறது.

சரி. அப்படியானால் இந்த மன அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?
வேறென்ன? நம்முடைய புன்னகையும் சிரிப்பும்தான். ஆம் மனதை எப்போதும் நகைச்சுவை உணர்வுடனும் புத்துணர்வுடனும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். நல்ல புத்தகங்களை வாசியுங்கள். எப்போதும் புன்னகையுடன் வாழ்கிறவர்கள் மற்றவர்களைவிட நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அவர்களுக்கு மனஅழுத்தத்தால் இரத்தத்தில் உண்டாகிற அமிலம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவதால் வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகளும் குறைந்துபோகிறது.

முடிவாக,

நம்முடைய மனதைப் பேணுவோம். வியாயாதிகளின்றி வாழுவோம்.
நன்றி வணக்கம்.

Monday, December 5, 2011

சந்தைக்கு வந்த பூக்கள்

(என்னைப் பாதித்த ஒரு இளைஞனின் வாழ்க்கையினால் இக்கவிதைப்பூ மலர்ந்தது. அந்த இளைஞனின் மனோநிலையிலிருந்து எழுதினேன்.. மாற்றம் வந்தால் சரி.)




மாலினிக்கு நாலு வருஷம்
மாலாவுக்கு அஞ்சு வருஷம்
கோமதிக்கு கொஞ்சம் அதிகம்
ஏழு வருஷம்
கொடுத்து கொடுத்து
வேய்ந்த கூரையில்
பிய்ந்த ஓலைகளாய்
பாதி வாழ்க்கை முடிந்தாயிற்று
நான் பூத்த கருப்பையில்
என்னுடன் பூத்த
பெண் பூக்கள் மூன்று

முதிர்வடைந்து
பூச்சந்தைக்கு வந்தாச்சு
விற்பனைதான் நடக்கவில்லை

துணைப்பூக்களைத் தேடுகிறேன்
அவைகளுக்கல்ல
எனக்கு

அவைகளின் நிலைமை?

மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்.
***

Friday, December 2, 2011

வாழ்க்கை நடத்திய காம பாடம்

காமம் என்றால் என்ன
என்னிடம் கேட்டது வாழ்க்கை
புணர்ச்சி வேட்கையே காமம்
சொன்னது நான்

தவறு
காதலின் நீட்சியே காமம்
அன்புத் தென்றலின்
வேக முதிர்ச்சியே
அந்த
ஆரவாரப் புயல்

எங்கள் இளைஞர்களின் கருத்து
வேறுவிதமாய் உள்ளதே என்றேன் நான்
என்னவென வினவியது வாழ்க்கை

வாழ்வின் நோக்கமே காமம்
என்பதுதான்
இன்றைய இளைஞர்களின்
கோட்பாடும் கொள்கையும்

அவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டுத்தான்
பிழைக்கிறது
சினிமாவும் பத்திரிக்கையும் என்றேன்

உண்மைதான்
அது முறையற்ற காமம்
அவர்கள் மாயவலையில்
விழும் ஈனமான்கள்
ஆனால் மெய்நிலை வேறு என்றது


விளக்கு என்றேன் வியப்புடன்
அழகாய் விளக்கியது வாழ்க்கை

பெரிய உணவுத் திருவிழா
வகை வகையான உணவு வகைகள்
திகட்டத் திகட்ட அலுக்காத அறுசுவைகள்
புதுமை புதுமை என
பிரம்மாண்டமாய் விளம்பரங்கள்

ஊரிலுள்ளோர் எல்லோரும் கூடினார்களாம்
அந்த அரங்கத்தில்

பிரம்மாண்ட மேஜை
பெரிய பட்டு விரிப்பு
எல்லோர் கண்களும் அதன் மேலே

திரை நீக்கப்பட்டது
இருந்தது என்ன தெரியுமா
நாம் அன்றாடம் சாப்பிடும்

சாதமும் சாம்பாரும்
ரசமும் பொறியலும்
அப்பளமும் கூட்டும்

வீட்டில் சாப்பிடாத
வெறிநாய்கள்

தட்டோடு நக்கின
காணாததை கண்டது போல.

இதுதான் காமம் என்றது வாழ்க்கை

எவ்வளவு அழகாய் சொல்லிவிட்டது வாழ்க்கை
பெருமிதமாய் பார்த்தேன்

என் அறிவு தோற்றுவிட்ட
வாழ்க்கையை நோக்கி.




சந்திப்போம் அடுத்த பதிவில்.

Thursday, December 1, 2011

செயல்களும் விளைவுகளும்

சின்ன சின்ன சிந்தனைகள் என்ற வரிசையில் சிந்தனைத்துளிகளை நான் தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன். என் முந்தைய பதிவுகளை படிப்பவர்களுக்கு அது தெரியும். அந்த வரிசையில் இன்றைய சிந்தனைத்துளி:
நாம் எவ்வளவோ செயல்களை வாழ்க்கையில் தொடர்ந்து செய்து வருகிறோம். நல்ல செயல்களையும் செய்கிறோம். தீய செயல்களையும் செய்கிறோம். இரண்டுமே பெரும் விளைவுகளை உண்டுபண்ணுகின்றன. இதைப்பற்றி இன்று கொஞ்சம் அலசலாம்.

1971-ஆம் வருடம் நவம்பர் 24-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் போர்ட்லாண்டு நகரிலிருந்து அமெரிக்கா நாட்டின் சீட்டில் நகருக்கு ஒரு விமானம் பறந்துகொண்டிருந்தது. அதில் பயணம் செய்த டி.பி.கூப்பர் என்கிற தீவிரவாதி அந்த விமானத்தை வெடிகுண்டை வைத்து மிரட்டி கடத்தினான். ரூ.20,00000/- அமெரிக்க டாலர்கள் பிணயத்தொகையாக தந்தால் பயணிகளை விட்டு விடுவதாக அரசாங்கத்தை மிரட்டினான். அரசாங்கமும் பயணிகளில் நலன் கருதி சம்மதித்தது. விமானத்தை தரையிறக்கி பணத்தைப் பெற்றுக்கொண்ட பின் மறுபடியும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து விமானத்தை மீண்டும் வானில் பறக்கச் சொல்லி நிபந்தனை விதித்தான். விமானம் வானில் பறந்தபோது தாழ்வாக பறக்கச் சொல்லி விமானிக்கு கட்டளையிட்டு, அவ்வாறு தாழ்வாக பறக்கும்போது ஒரு காட்டுப் பகுதியில் பாரசூட் மூலம் குதித்து தப்பி ஓடிவிட்டான். மாயமானவன் மாயமானவன்தான். இன்னும் அவன் பிடிபடவில்லை. காவல்துறையால் அவனை இன்னும் பிடிக்க முடியவில்லை. வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது.

பார்த்தீர்களா ஒரு மனிதனின் ஒரே ஒரு தீயசெயல்தான். ஆனால் அது அவனோடு நிற்காமல் முழு அரசாங்கத்தையும் நாட்டையுமே திகிலடையச்செய்து பாதிப்புக்குள்ளாக்கிவிட்டது. நாம் நம் குடும்பத்தில் ஓர் அங்கம். நம் குடும்பம் சமுதாயத்தில் ஓர் அங்கம். நம் சமுதாயம் நம் நாட்டில் ஓர் அங்கம். ஆகவே தனி ஆளாக நாம் முடிவெடுப்பினும் அது முழு தேசத்தையுமே பாதிக்கத்தான் செய்கிறது. உதாரணமாக குடும்பத் தகறாறுகளினால் உண்டாகும் வேதனையினால் ஒரு மனிதன் தற்கொலை செய்துகொள்ளும்போது என்ன நிகழ்கிறது பாருங்கள்? அவன் இறந்து விடுகிறான். அதன்பிறகு அந்த குடும்பத்திற்கு எவ்விதமான பிரச்சினைகள் உண்டாகிறது. அந்த குடும்பத்தலைவன் மரணமடைந்த பிறகு அவனது வாரிசுகள் எத்தனை துன்புறுகின்றனர். வயதுக்கு வந்த பிள்ளைகள் இருந்தாலும் பரவாயில்லை. சிறு பிள்ளைகளாக இருந்து விட்டால் அந்தோ பரிதாபம்தான். வறுமை நிலைக்குள்ளாகி உணவுக்கும் உடைக்குமே கையேந்துபவர்களாக மாறிவிடுகின்றனர். உலகத்துக்கும் குடும்பத்துக்கும் ஒரு ஏளனப்பொருளாகி விடுகின்றனர். தற்கொலை எதையுமே மாற்றுவதில்லை. மாறாக இருப்பவைகளையும் மோசமாக மாற்றி விடுகின்றது. இது ஒரு உதாரணம்தான். இதைப்போல இன்னும் நாம் செய்யம் சிறு மடத்தனங்கள் நம்முடைய வாழ்க்கையை மட்டுமல்லாம் நம்மைச் சார்ந்த முழு குடும்பத்தையுமே சிக்கலுக்குள்ளாக்குகின்றன. இறைவன் கொடுத்த வாழ்க்கையை இனிமையாக அனுபவிப்போம். துன்பங்களையும் வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு, இன்னும் சொல்லப்போனால் அவற்றை வரவேற்கத் துவங்கிவிடுவோமானால் துன்பங்களும் நமக்கு இன்பங்களாய் மாறிப்போகும். பிரச்சினைகளை சந்திக்கும்போதுதான் நம்முடைய முழு ஆற்றலும் வெளிப்படுகிறது. ஆகவே துன்பங்கள், பிரச்சினைகள் ஏற்படும்போது அவை உங்கள் திறமைக்கு விடப்பட்ட சவால் என்று நினைத்து அவற்றை சந்தியுங்கள். வாழ்வில் வளம் பெறுவீர்கள்.

“ உங்களுக்குள் நடக்கும் போரில் முதலில் வெற்றி பெறுங்கள். பிறகு உங்களுக்கு வெளியில் நடக்கும் போரிலும் எளிதாக வெற்றிபெறுவீர்கள். “