Tuesday, January 31, 2012

காகிதங்களாகிப்போன கதாநாயகிகள்



கனவுகளோடு வந்த
இந்தக் கதாநாயகிகள்
காகிதங்களாகிப் போனார்கள்

மலர்க்கரங்களின் கும்பிடுகை
மறுதலிக்கப்பட்ட கணங்களில்
சீதைகள் துகிலுரியப்பட்டார்கள்

வர்ணனைகளை வாங்கிய இதழ்கள்
சிகரெட் தொடுதல்களில்
கருகிப் போயின

கல்லூரிக் கலையரங்கங்கள்
களியாட்டக் கடைகளின்
புழக்கடையாகிப் போயின

பூவுக்குள் பூகம்பங்களல்ல
பூகம்பங்களுக்குள் பூக்கள்
சிறைப்பிடிக்கப்பட்டன

கடைசியாக…
சிதைகள் எரிந்தன
சீதைகளும்தான்.





.

Monday, January 30, 2012

காய்கறி வாங்குவது ஒரு கலை - தெரியுமா உங்களுக்கு?






நிறைய பேருக்கு காய்கறி வாங்கத் தெரிவதில்லை. இது கசப்பான உண்மை. கேட்டால் அதெல்லாம் என் மனைவி பார்த்துக்கொள்வாள் என்பார்கள். நிறைய பெண்களுக்கும் கூட இதைப்பற்றி சரியாக தெரிவதில்லை. அதற்காகத்தான் இந்தப் பதிவு.


காய்கறி வாங்குவது ஒரு கலைதான். நல்ல காய்கறியாகவும் வாங்க வேண்டும். அவை வீணாகாதபடி பாதுகாக்கவும் வேண்டும்.

சரி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.




வாழைக்காய்

முதலில் வாழைக்காய். வாழைக்காயை கறியாகவோ வதக்கலாகவோ செய்ய வேண்டுமென்றால் காம்பு ஒடிந்த இடத்தில் சற்று வெள்ளையாக இருப்பதைப் பார்த்து வாங்கவேண்டும். சற்று இளசாக இருந்தாலும் பரவாயில்லை.வறுவல், பஜ்ஜி முதலியவை செய்யவேண்டுமென்றால் நல்ல பச்சை நிறத்தில் முற்றியதாக பார்த்து வாங்கவேண்டும்.வாங்கி வந்தபிறகு காயைச் சுத்தமாக பால் போக கழுவிவிட்டு, ஒரு வாளித் தண்ணீரில் போட்டு வைத்தால், வாடாமலும் பழுக்காமலும் இருக்கும்.




உருளைக்கிழங்கு

செம்மண்ணில் பயிரான உருளைக் கிழங்குகளே உயர்வானவை. கெட்டியாகவும் தழும்புகள் இல்லாமலும் ஓட்டைகள் இல்லாமலும் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும்.பச்சையாகவோ அல்லது பச்சை நிறத் தழும்புகள் உள்ள உருளைக்கிழங்குகள் நன்றாக இருப்பதில்லை. சிறுமுளை கண்டவற்றையும், தோல் சுருங்கியவற்றையும் வாங்குதல் கூடாது.




முள்ளங்கி

முள்ளங்கியை, சற்றுப் பருத்து நீண்டிருப்பதாகவும், நடுவில் இலைகளும் ஓரத்தில் பச்சை இலைகளும் இருப்பதாகவும் பார்த்து வாங்கவேண்டும். கையால் தட்டிப் பார்த்தால் சில பொத் பொத்தென்று சத்தம் கேட்கும். சோளத் தட்டுப் போல் இருக்கும். அவைகளை வாங்குதல் கூடாது. சமைக்க உதவாது. முக்கியமான ஒன்று வாங்கிய அன்றோ அல்லது மறுநாளோ சமைத்துவிட வேண்டும்.




முருங்கைக்காய்

முருங்கைக்காயை நல்ல கரும்பச்சை நிறத்தில் சற்றுப் பருமானாகவும் (ரொம்ப இல்ல) உருண்டையாகவும் இருந்தால் வாங்க வேண்டும். பட்டையாக இருந்தால் வாங்கக் கூடாது. இரண்டு முனைகளையும் பிடித்துக் கொண்டு லேசாக முறுக்கினால் சற்று வளைந்துகொடுக்க வேண்டும். அது இளசாக இருக்கும். கட்டைபோல் இருந்தாலோ அல்லது முறுக்கும்பொழுது மளமளவென்று சத்தம் கேட்டாலோ வாங்காதீர்கள். அது முற்றலாய் இருக்கும். முப்பட்டையாகவோ, சற்று மஞ்சள் கலந்த பச்சைநிறத்திலோ, விதைகள் வெளியே தெரியும்படியாகவோ, முட்டி முட்டியாகவோ இருந்தால் காய் முற்றலென்று தெரிந்துகொள்ளலாம். காய்களை வாங்கி வந்தவுடன் ஒரு வாளித்தண்ணீரில் பாதிக்காய்கள் முழுகும்படி போட்டு வைக்கவேண்டும்.




தக்காளி

தக்காளியைக் கெட்டியாக உருண்டையாக, செங்காயாகப் பார்த்து வாங்க வேண்டும். முண்டும் முரடுமாக இருந்தால் சற்று அதிகமாகவும், சதைப்பகுதி குறைவாகவும் இருக்கும். உடனே சமைக்க வேண்டுமென்றால் நன்றாக பழுத்திருந்தாலும் கெட்டியாக இருக்கும்படி பார்த்து வாங்கவேண்டும். பழம் மெத்து மெத்தென்று இருந்தால் சாறு கெட்டுப்போயிருக்கும். காம்புக்கு அருகே நல்ல பச்சையாகவும், அடிப்பாகத்தில் சிவப்பாகவும் இருப்பதை பார்த்து வாங்கினால் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். நாளைக்கு பழம் வேண்டுமென்றால் அரிசி டப்பாவில் போட்டு வைத்தால் நன்றாக பழுத்துவிடும்.




பீன்ஸ்

பீன்ஸ் புதியவையாக இருந்தால் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். ஒடித்தால் வெடுக்கென்று உடையும். சமைப்பதற்கு அதுதான் நல்லது. முற்றின காய்கள் வெளிர்ப்பச்சையாக இருக்கும். நாள்பட்டவையாக இருந்தாலும் வதங்கி வெளிர்ப்பச்சை காட்டும் அவை சமையலுக்கு உதவாதவை. விதைகள் புடைத்துக்கொண்டிருந்தால் தோல் பயன்படாது. விதைகளைத்தான் உபயோகப்படுத்த முடியும். இவை மெத்தென்றோ ஈரமாகவோ இருந்தால் சீக்கிரத்தில் அழுகிப் போய்விடும். இவற்றை ஒன்றோடொன்று படாமல் காற்றோட்டமாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பூஞ்சைக்காளான் பிடித்து விடும்.




அவரைக்காய்

அவரைக்காய் வாங்குதற்கும் ஏறக்குறைய பீன்ஸ் போலத்தான். அதன் நடைமுறைகள்தான். மேலும் அவரை முற்றியிருந்தாலும் மளுக்கென்று உடையாது. சமையலுக்கு பிஞ்சு அவரைக்காயே உகந்தது.




கத்தரிக்காய்

கத்தரிக்காயை சிறு ஓட்டைகூட இல்லாமல் பார்த்து வாங்கினால்தான் உள்ளே புழு இல்லாமல் இருக்கும். காய் முழுவதும் ஒரே நிறத்தில் பளபளவென்று இருத்தல் வேண்டும். காம்புடன் கூடிய வால்பகுதி நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். காம்பு குச்சி போன்று இருந்தால் காய் முற்றல். இலைப்பகுதி குட்டையாக இருந்தாலும் முற்றலே. ஆழ்ந்த ஊதா நிறத்தில் உள்ள காய்கள் நல்லது. பச்சை நிற காய்களும் ஏற்றவையே. பச்சைக் காயில் மேலே வெள்ளை வரிகள் இருந்தால் கசக்கும். குழம்பே கசப்பாகிவிடும். காம்பிள் முள் இருந்தால் நல்லவையே. காம்பு கறுத்து சுருங்கியிருந்தால் நாள்பட்ட காய் என்று அர்த்தம். காயை நறுக்கியவுடன் அரிசி கழுவும் நீரில்போட்டால் கறுப்பாகாமல் இருந்தால் நல்ல காய் என்ற அர்த்தம்.




வெண்டைக்காய்

வெண்டைக்காயில் பச்சைநிற காய்தான் சுவையுள்ளது. மஞ்சளாகவும், வெள்ளையாகவும் இருந்தால் வாங்கவேண்டாம். ருசி இருக்காது. வெண்டைக் காயின் நுனியை உடைத்தால் பட்டென்று உடையவேண்டும். அதுதான் பிஞ்சு. உடையாமல் வளைந்துகொடுத்தாலோ அல்லது இரண்டாக பிளந்தாலோ அது முற்றல். காம்பு சுருங்கியிருந்தாலும் முற்றல். ஓட்டை இல்லாமல் வாங்குங்கள். புழு இருக்க வாய்ப்புண்டு.




வெங்காயம்

வெங்காயத்தில் நாட்டு வெங்காயம் சாம்பார் வெங்காயம்தான் ருசியானது. உடம்புக்கும் நல்லது. பொதெபொதெவென்று ஊறியதை வாங்கக் கூடாது. வெங்காயத்தின நடுவில் சோளத்தட்டு போல இருந்தால் வாங்கக் கூடாது. வெங்காயத்தின் நுனிப் பாகத்தை அழுத்தினால் கெட்டியாக இருக்க வேண்டும். நுனி மெத்தென்று இருந்தால் அழுகத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.




முட்டைக்கோஸ்

இலைகள் வெள்ளையாக இருக்கும் முட்டைக்கோஸ்கள் சற்று முரடாக இருக்கும். பச்சையாக உள்ளவை இளசாக இருக்கும். காய் உருவத்தில் சிறிது கெட்டியாக கனமாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும். நடுக்காம்பு வெள்ளையாகவும், நாற்றமில்லாமலும் இருந்ததால் காய் புதியது என்று அர்த்தம். வாங்கும்போது காம்பை முகர்ந்து பார்த்து வாங்கவேண்டும். பழையது நாற்றமடிக்கும்.




பீர்க்கங்காய்

பச்சைப் பசேல் என்று இருக்குமாறு பார்த்து பீர்க்கங்காய் வாங்க வேண்டும். காயின் மேலுள்ள நரம்புகள் மிகவும் எடுப்பாக இருந்து வெள்ளைப் புள்ளிகளும் இருந்து காம்பு வறண்டு இருந்தால் முற்றலாகும். சற்று மெல்லிய காய்களை, நன்றாக பச்சையாக இருக்கும்படியும் நரம்புகள் உள்ளடங்கி இருக்கும்படியும் பார்த்து வாங்க வேண்டும். பிஞ்சுக்காய் மேலே வரிகளுடன் மேலே வரிகளுடன் மெல்லியதாக நீண்டிருக்கும். பச்சையாக இருக்கும்.




சேப்பங்கிழங்கு

சேப்பங்கிழங்கு நீளவாட்டத்தைவிட உருண்டை வடிவமாக இருப்பதைப் பார்த்து வாங்கினால் சவுகரியாக இருக்கும். மேலே நிமிண்டிப் பார்த்தால் தோல் வரும். உள்ளெ வெள்ளையாக இருந்தால் நல்ல கிழங்கு. ஆனால் நீள்வட்டக் கிழங்கில் சத்து அதிகம்.




புடலங்காய்

புடலங்காய் நீண்டு மெல்லியதாக இருந்து மளுக்கென்று உடைந்தால் நல்ல பிஞ்சுக்காய். சுவையாக இருக்கும்.




பச்சை மிளகாய்

பச்சை மிளகாயில் காம்பும் காயும் பச்சையாக இருந்தால் புதியது. காம்புகள் சுருங்கியிருந்தாலும், கறுத்து இருந்தாலும் பழையது.


எலுமிச்சம் பழம்
நல்ல மஞ்சளாகவும், தோல் மெல்லியதாகவும் இருக்கும்படி பார்த்து வாங்கினால் நல்லது. காய் மெத்தென்று அமுங்கினாலும், காம்புக்கு அருகில் கன்றியிருந்தாலும் நாட்பட்ட பழமாகும். வாங்க வேண்டாம்.




கொத்துமல்லி, கருவேப்பிலை

கடைசியாக இந்த கருவேப்பிலை, கொத்துமல்லி. கொத்துமல்லி, கீரை வகைகளில் பழுப்பு இல்லாமலும், பூ இல்லாமலும் பார்த்துவாங்க வேண்டும். கறிவேப்பிலையில் சிறிய வகையே மிக்க மணமுள்ளது. மெலிதாக நீண்ட இலைகளில் அவ்வளவு மணம் இருப்பதில்லை.

என்னங்க... காய்கறி எப்படி வாங்கணும்னு தெரிஞ்சுக்கிட்டிங்களா?...
ஹலோ... எங்க சார் போறீங்க.... ஓ....இவ்வளவு நாள் தெரியாத விஷயம் தெரிஞ்சுகிட்டதால மனைவிகிட்ட சவால் விட்டுட்டு மார்க்கெட்டுக்கு கிளம்புறிங்களா? பார்த்து கவனமா வாங்குங்க.... பல்பு கில்பு வாங்கிராதீங்க....(ஹி....ஹி...) வரட்டுங்களா?!!!....)

நலமுடன் வாழ்க!...





.

Saturday, January 28, 2012

பால் எப்படி குடிக்க வேண்டும்?




நம்மில் பலருக்கு பாலை எப்போது குடிக்க வேண்டும்? அல்லது எப்படி குடிக்க வேண்டும்? என்று தெரிவதில்லை. உண்ணும் வகையறியாது உண்டால் எதுமே உடலுக்கு ஆகாது இல்லையா? அதற்குத்தான் இந்த பதிவு.

பாலை பகலிலும் அருந்தலாம். இரவிலும் அருந்தலாம். ஆனால் உணவு உண்ட பிறகுதான் குடிக்க வேண்டும்.

பாலைக் குடிக்கும்போது அமைதியாகவும் சிறுகச் சிறுகச் சுவைத்து குடிக்க வேண்டும். அதுவே உடலுக்கு நல்லது. அவ்வாறின்றி மளமளவென குடிப்பது மற்றும் பெரும் அளவில் விழுங்குவது ஆகியவற்றால் வயிற்றில் செரிப்பதில் பிரச்சினை ஏற்படும்.

பாலுடன் சர்க்கரையைச் சேர்த்துக் குடிப்பதால், சர்க்கரை பாலின் தன்மையைக் கெடுத்து, அதை இரைப்பையில் புளிக்கும்படியும் வாயு உண்டாகும்படியும் செய்கிறது. அதனால் சர்க்கரை சேர்க்காமலே குடிப்பது நல்லது.

அப்படியானால் இனிப்பு வேண்டுமே என்ன செய்வது என்று கேட்கிறீர்கள். அப்படித்தானே? அதற்கு ஒரு கரண்டி தேனை கலந்து சாப்பிடலாம். அது உடலுக்கு மிகவும் நல்லது.

பிற நாடுகளைவிட நம் இந்திய நாட்டு மக்கள் உட்கொள்ளும் பாலின் அளவு மிகக் குறைவு என்று ஒரு சர்வே தெரிவிக்கிறது. சைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிகமாக பால் அருந்த வேண்டும்.

மற்ற எல்லா பிராணிகளின் பாலைவிட பசும்பால்தான் உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கிறது. (அப்பாடா....சந்தேகம் தீர்ந்தாச்சா?) அதனால்தான் வீக் ஆக இருக்கும்போது மருத்துவர்கள் இந்த பாலை அருந்தச் சொல்கிறார்கள்.

பால் ஆகாரமாக மாறும்போது குற்றமற்ற இனிய திரவமாகிறது. காயம் பட்டவர்களுக்கும் தாது (Sperm) பலவீனப்பட்டவர்களுக்கும் இது நன்மை தரும்.




களைப்பு, மயக்கம், சுவாச காசம், அதிக தாகம், பசி, இரத்தக் குறைவு இவற்றையெல்லாம் பசும்பால் எளிதில் குணப்படுத்தும்.

பாலிலே 101 வகை நன்மை தரக்கூடிய பொருட்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பாலில் புரோட்டின் அதிகமாக உள்ளது. இது உடலின் திசு உற்பத்திக்கும், பராமரிக்கும் உதவுகிறது.

எலும்புகளுக்கு உரமூட்டும் கால்சியமும், உடலில் அதிக அளவில் செல்கள் உற்பத்தியாவதற்கும் பாஸ்பரசும் போதிய அளவு இந்த பாலில் இருக்கிறது.

உடலின் சூட்டை பாதுகாக்க கொழுப்பு வேண்டும். அதுவும் பாலில் நிரம்ப உள்ளது. விசேஷம் என்னவென்றால் இதிலுள்ள கொழுப்பு எளிதில் செரிமானம் அடையக் கூடியது.

பாலைக் காய்ச்சும்போது மேலே ஆடை படிகிறதல்லவா. அதுதான் கொழுப்பு. பாலிலுள்ள கொழுப்புப் பகுதியைப் பிரித்தெடுத்து வெண்ணையாகவும், நெய்யாகவும் நாம் பயன்படுத்துகிறோம்.

இதையெல்லாம் நான் சொல்லலீங்க.. வாழ்வாங்கு வாழ்ந்த நம் முன்னோர்களின் அனுபவ மொழிகள்தான் இவை.

பாலில் இவ்வளவு நன்மை இருக்கிறதினால் நல்லா பால் குடிங்க. அதை முறையாகவும் குடிங்க. வரட்டுங்களா..........!


வாழ்க நலமுடன் !








.

Friday, January 27, 2012

தினமும் ஒரு வாழைப்பழம் போதும் - ஆரோக்கியமாக வாழ.




‘தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக வாழலாம்’ என்ற பொன்மொழியை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் ‘தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள். நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்’ என்பதுதான் இன்றைய நவீன பொன்மொழியாகும். வாழைப்பழம் அநேக வியாதிகளுக்கு தீர்வு தரும் ஒரு இயற்கை பொக்கிஷமாகும். உணவுச் சத்துக்கள் நிரம்பிய உணவுகளில் வாழைப்பழம் தலைமை வகிக்க தகுதியான அளவுக்கு போஷாக்கு சத்துக்கள் நிரம்பியதாக (Nutrional Value) உள்ளது. ஆப்பிளோடு ஒப்பிட்டால் வாழைப்பழம் நான்கு மடங்கு புரோட்டினும், இரண்டு மடங்கு கார்போஹைட்ரேட்டும், மூன்று மடங்கு பாஸ்பரஸ் சத்தும், ஐந்து மடங்கு விட்டமின் ஏ (Vitamin A) உயிர்ச்சத்தும், ஐந்து மடங்கு இரும்புச் சத்தும், மேலும் பல உயிர்ச்சத்துக்களும் (Minerals and Vitamins) அதிகம் கொண்டதாக அமைந்துள்ளது.

இப்போது சொல்லுங்கள். தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டுமா? அல்லது வாழைப்பழம் சாப்பிட வேண்டுமா?

இயற்கையான சர்க்கரைகளான Sucrose, Fructose மற்றும் Glucose ஆகியவை வாழைப்பழத்தில் நிறைந்துள்ளன. சர்க்கரையைத் தவிர்த்து வாழைப்பழம் சாப்பிடலாமே. வாழைப்பழம் வெறும் சக்தியூட்டும் பழம் மட்டுமல்ல. அது ஏராளமான வியாதிகளிலிருந்தும் நம்மைக் காக்கிற ஒன்றாய் இருக்கிறது. அது நிச்சயம் நமது அன்றாட உணவில் இடம்பெற வேண்டும்.

ஒரு உலகளாவிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு ஐம்பது சதவீதம் மாரடைப்பு வரும் அபாயம் குறைவு என்று. ஆஹா.... என்ன ஒரு மகிழ்ச்சியான செய்தி. இல்லையா? மாரடைப்பு அபாயம் உள்ளவர்களும் இப்போதே வாழைப்பழம் சாப்பிட ஆரம்பித்து விடுங்கள்!. வாழைப்பழத்தில் மற்ற பழங்களைவிட அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. ஆகவே இரத்த அழுத்தத்தை சமன் செய்கிறது. அப்பாடா பிரஷர் உள்ளவர்களுக்கு இனி நிம்மதிதான். இயற்கை வழியில் ஒரு அருமை மருந்து. இல்லையா?.

மேலும் பொட்டாசியமானது நம்முடைய மூளையை பராமரிக்கவும் உதவுகிறது. சிதைந்து போன மூளை செல்களையும் பழுதுபார்க்கிறது. ஒரு ஆராய்ச்சி இவ்வாறு தெரிவிக்கிறது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கிறது என்று. (குட்டீஸ்க்கு இப்பவே நல்லா வாழைப்பழம் கொடுக் ஆரம்பித்துவிடுங்கள்).


நம்முடைய இரத்த அணுக்கள் (வெள்ளை மற்றும் சிவப்பு) நிறைந்த இரத்த தட்டுகள், குடல், நரம்பு மண்டல ஆகியவற்றில் உள்ள திசுக்களில் காணப்படும் செராடோனின் (Serotonin) என்கிற கூட்டுப்பொருள்தான் டென்ஷனான நேரங்களில் நம்முடைய மூளையை அமைதியாக வைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த செராடோனின் உற்பத்தியாவதற்கு காரணமாக ட்ரைப்டோபான் (Tryptophan) என்கிற அமினோ அமிலம் (Amino Acid) உள்ளது. இந்த ட்ரைப்டோபான் வாழைப்பழத்தில் ஏராளம் உள்ளது. ஆகவே டென்ஷன் வரும் நேரத்தில் நீங்கள் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் டென்ஷன் குறைகிறது. அதற்காக நீங்கள் நாள் முழுவதும் கோபம் கொள்கிற டென்ஷன் பார்ட்டியாக இருந்ததால் ஒன்றும் செய்ய முடியாது. அப்புறம் குண்டுகல்யாணம் சைஸ்க்கு மாறிப்போய்விடுவீர்கள். பார்த்துங்க பார்த்து!.

மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், நமக்கு மனநோயோ என்று பயப்படுபவர்கள் (ஹி...ஹி) தாராளமாக வாழைப்பழம் பயன்படுத்தி குணம் பெறுங்கள்.




வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன மாதிரியான வியாதிகளை சரிப்படுத்தலாம் என்று கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்:-


1. வயிற்றுக்கோளாறு:

ஆம். தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் உங்கள் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும். வாழைப்பழமும் சுத்தமான தேனும் கலந்து சாப்பிட்டால் வயிறு அமைதியாக வாழும்.

2. மாதவிலக்கு கோளாறுகள்:

பெண்களுக்கு: மாதவிலக்கு தள்ளிப்போதல் மற்றும் அது சம்பந்தமான மாதவிலக்கு பிரச்சினை உள்ளவர்கள் (especially :- Premenstrual Syndrome) தாராளமாக வாழைப்பழம் சாப்பிடுங்கள். எப்படியெனில் வாழைப்பழத்தில் பி6 விட்டமின் (Vitamin B6) நிறைய உள்ளது. அது இரத்தத்தில் சர்க்கரை அளவையும் மற்றும் மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யவும் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளும் (Sugar Patients) கவனிச்சுக்கோங்க.

3. மனஅழுத்தம்:

மன அழுத்தத்தின் போது பொட்டாசியம் சத்துக் குறைபாடுதான் பெரும் பங்கு வகிக்கிறது. அதுதான் நம்முடைய இதயத்துடிப்பையும், மூளையையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. உடம்பிலுள்ள நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிரம்ப உள்ளது. ஆகவே மனஅழுத்தத்துக்குள்ளாகுபவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.

4. இரத்த சிவப்பணுக்கள் குறைபாடு:

வாழைப்பழத்தில் இரும்புச் சத்து ஏராளம் இருப்பதால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் (hemoglobin) உற்பத்திக்கு காரணமாகிறது. ஆகவே இரத்த சிவப்பணுக் குறைபாடுகளை சரி செய்கிறது.

5. சிகரட் பழக்கம் நிறுத்துதல்:

நீங்கள் சிகரெட் பிடிப்பவர்களாக இருந்தால் இந்த நிமிடத்திலேயே சிகரெட்டை தூக்கி எறிந்துவிட்டு சிகரெட் பிடிக்க விருப்பம் வரும்போதெல்லாம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள் (நிறுத்தும் வரை மட்டுமே மக்காஸ்... அப்புறம் தினமும் இரண்டு போதும்!) ஏனெனில் இந்த வாழைப்பழ பத்தியம் உங்களுக்கு சிகரெட் பிடிக்கும் எண்ணத்தை அறவே நிறுத்திவிடுகிறது. மேலும் வாழைப்பழத்திலுள்ள விட்டமின் பி6 மற்றும் பி12, பொட்டாசியம், மக்னீசியம் ஆகிய சத்துக்ககள் நிகோட்டினின் சக்தியை உள்வாங்கி அதனுடைய தீய தாக்குதலில் இருந்து உடலை பாதுகாக்கும் பணியைச் செய்யும். பழைய உடல் நலத்தை மீட்டுத் தரவும் உதவும்.

6. அல்சர்:

நிறைய மருத்துவமனைகளில் அல்சர் நோயாளிகளுக்கு வாழைப்பழம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. வயிற்றில் சுரக்கும் அமிலங்களை சமநிலைப் படுத்துவதால் இது பரிந்துரைக்கப்படுகிறது. குடல் கோளாறுகளுக்கு இது அருமையான மருந்து.

7. வெப்பநிலை கட்டுப்பாடு:

உலகில் வெப்பமான நாடுகளில் மருத்துவர்கள் கர்ப்பிணிப் பெண்களை தாராளமாக வாழைப்பழம் சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். காரணம் வாழைப்பழம் நம்முடைய உடல் வெப்பநிலையை சமநிலைப் படுத்தும் பணியை பிரமாதமாகச் செய்கிறது. ஆகவே குழந்தை பிறக்கும் போது அது கூலா பிறக்கும். அட.....அட....என்னன்னு சொல்ல....போங்க!.

8. பூச்சிக்கடிகள்:

மேலும் பூச்சிகள் கடிக்கும் போது வாழைப்பழத் தோலை உரித்து கடிபட்ட இடங்களில் தேய்த்தால் வீக்கத்தையும் காயத்தையும் குறைக்கும் என ஒரு மருத்துவ குறிப்பு தெரிவிக்கிறது. வாழைப்பழத்தின் மகிமையைப் பார்த்திங்களா?!....ஓ.கே.

இவ்வளவு நேரம் கட்டுரையை வாசிச்சி முடிச்சாச்சா? சரி. இனியாவது தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க. நோய்களை ஓட ஓட விரட்டுங்க. ஆரோக்கியமாக வாழுங்க!.

வாழ்க நலமுடன்!





.

Thursday, January 26, 2012

வதந்தி என்றால் என்ன? அதன் விளைவுகள் என்னென்ன?

வதந்திகள் எவ்வளவு வேகமாக காட்டுத்தீயைப் போல பரவுகின்றன, என்னென்ன விளைவுகளை உண்டுபண்ணுகின்றன என்பதை விளக்கும் மிகவும் சுவாரஸ்யமான எளிய கதை ஒன்று கீழே: படிக்கத் தவறாதீர்கள்:-

ஆசிரியர் ஒருவர் வயல் வழியாக வந்து கொண்டிருந்தார். லொக் லொக் என்று இருமிக்கொண்டே இருந்தார். அவர் தொண்டையில் இருந்து வந்த சளியைத் துப்பினார். மொத்தமாக விழுந்த சளியைப் பார்ததார். அதில் பறவையின் இறகு ஒன்று கிடப்பதைக் கண்டு திகைத்தார்.

"ஐயோ! எனக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லையே? சளியில் பறவையின் இறகு எப்படி வர முடியும்?" என்று நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டே தள்ளாடியபடியே தன் வீட்டை அடைந்தார்.

" உங்களுக்கு என்ன நடந்தது? ஏன் இப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டாள் அவருடைய மனைவி.

"நீ யாரிடமும் சொல்லமாட்டேன் என்று வாக்குறுதி தந்தால் நான் சொல்கிறேன்" என்றார் அவர்.

"நான் யாரிடமும் சொல்லமாட்டேன். எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்" என்று வற்புறுத்தினாள் அவள்.

தான் துப்பிய சளியில் வெண்மையான சிறு இறகு ஒன்று கிடந்தது பற்றி கூறினார் அவர்.

அவளால் இந்த ரகசியத்தை வெளியில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரியிடம் போய் " நீ யாரிடமும் சொல்லமாட்டேன் என்றால் என் கணவரைப் பற்றிய ஒரு செய்தியை சொல்கிறேன் " என்றாள்.

" நான் யாரிடமும் சொல்லமாட்டேன். தயங்காமல் சொல்லு " என்றாள் பக்கத்து வீட்டுக்காரி.

" நீ யாரிடமும் சொல்லமாட்டாய் அல்லவா?" என்று மீண்டும் கேட்டாள் அவள்.

" என் மீது நம்பிக்கை இல்லையென்றால் சொல்ல வேண்டாம். இது வரை எப்பொழுதாவது உன்னை ஏமாற்றி இருக்கிறேனா?" என்று கோபத்துடன் கேட்டாள் பக்கத்து வீட்டுக்காரி.

" கோபப்படாதே. நீ மிகவும் நல்லவள்தான். அதனால்தான் உன்னிடம் சொல்ல வந்தேன். இன்று காலை வயலுக்குச் சென்றிருந்தபோது என் கணவர் கடுமையாக இருமிவிட்டு எச்சில் துப்பினாராம். அதில் கொக்கின் இறகு ஒன்று முழுமையாக வந்ததாம். அவருக்கு என்ன நோய் என்று தெரியவில்லை. எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது " என்றாள்.

" கவலைப்படாதே. இப்படிப்பட்ட அபூர்வ நிகழ்ச்சி சில சமயம் எல்லாருக்குமே நடக்கும். இதைப்பற்றி வேறு யாரிடமும் சொல்லாதே. அவர்கள் வதந்திகளைப் பரப்பி விடுவார்கள் " என்று நல்லவளைப் போல பேசினாள் அந்த பக்கத்து வீட்டுக்காரி.

குளத்திற்குத் தண்ணீர் எடுக்கச் சென்ற அவள் தன் தோழி ஒருத்தியைப் பார்த்தாள். "நான் சொல்லும் செய்தியை நீ யாரிடமும் சொல்லக்கூடாது. மிகவும் இரகசியம். அந்த ஆசிரியரின் மனைவியே என்னிடம் தனிப்பட்ட முறையில் சொன்னாள். அவள் கணவர் வயலுக்குச் சென்றிருந்தபோது இருமிவிட்டு எச்சில் துப்பினாராம். அவர் வாயிலிருந்து கொக்கு ஒன்று வெளியே வந்து பறந்து சென்றதாம் " என்றான்.

" என்ன முழுக் கொக்கா? அவ்வளவு பெரிய பறவை வாயிலிருந்து வந்து பறப்பது அதிசயமாக அல்லவா உள்ளது? சரி... சரி. இந்தச் செய்தியை யாரிடமும் சொல்லமாட்டேன் " என்று சொன்னாள் அந்தத் தோழி.

அடுத்தவளிடம் சென்று அந்தத் தோழி " ஆசிரியரின் வாயிலிருந்து வெளிவந்த கொக்கு இறக்கை அடித்துப் பறந்து சென்றது ' என்றாள்.

சிறிது நேரத்தில் அந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவியது.

"உங்களுக்குச் செய்தி தெரியுமா? ஆசிரியரின் வாயிலிருந்து கொக்கு கூட்டமே வெளியே வந்து பறந்து சென்றதாமே?" என்று கேட்டார் ஒருவர்.

"கொக்கு கூட்டம் மட்டுமல்ல. காக்கை, பருந்து போன்ற பறவைகளும் அவர் வாயிலிருந்து வந்தன. அந்தப் பறவைகளின் கூட்டத்தால் சூரியனே மறைக்கப்பட்டு எங்கும் இருள் சூழ்ந்தது" என்றார் மற்றொருவர்.

இந்தச் செய்திகளைக் கேள்விப்பட்ட ஆசிரியருக்குப் பைத்தியமே பிடிக்கும் போல இருந்தது. வதந்திகளிடமிருந்து தப்ப அவருக்கு வேறு வழி தெரியமால் இரவோடு இரவாக அந்த வீட்டைக் காலி செய்துவிட்டு வேறு ஒரு தொலைதூர ஊருக்கு சென்றுவிட்டார் அவர்.

பார்த்தீர்களா? இந்த வதந்திகளின் மோசமான விளைவுகளை. ஆகவே எந்த வடிவில் வந்தாலும் சரி. இந்த வதந்திகளை மட்டும் நம்பவே நம்பாதீர்கள்.





.

Sunday, January 22, 2012

வெள்ளைப்பூண்டா " சீ " என்பவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள்




ஆங்கில மருத்துவத்தை நம்புவது நல்லதுதான். ஆனால் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த தமிழ் மருத்துவமும் குறைந்தது அல்ல. நம் முன்னோர்கள் கடைப்பிடித்த சில நல்ல விஷயங்களில் இந்த வெள்ளைப் பூண்டு மருத்துவமும் ஒன்று. ஆகவே இவற்றை நாமும் கடைப்பிடித்துத்தான் பார்ப்போமே!

வெள்ளைப்பூண்டை உள்ளிப்பூண்டு என்றும் சொல்வார்கள். நம்மில் அநேகர் இதனை அதிகமாக விரும்புவதில்லை. இதன் நெடி தாங்காவிட்டாலும் மிகுந்த ஆரோக்கியம் தரும் உணவுதான் இது.

" நீங்கள் இத்தனை ஆரோக்கியமாக இவ்வளவு காலம் வாழ்ந்திருப்பதின் இரகசியம் என்ன?" என்று வயது முதிர்ந்த அவரைக் கேட்டார் ஒருவர்.

"அதற்குக் காரணம் வெள்ளைப் பூண்டுதான்" என்று நிதானமாகவும் அழுத்தமாகவும் பதில் சொன்னார் அந்தப் பெரியவர்.

அவருடைய ஒளிமிக்க கண்கள்; உறுதியாக பளபளக்கும் பற்கள்; எங்கோ ஒரு நரை காணும் முடி மொழுமொழுவென்று திடமாகத் தோன்றிய உடடல் எல்லாவற்றையும் பார்த்து மற்றவர் வியந்தார்.

அந்த வயது முதிர்தோருடைய பதிலைக் கேடடு வியப்படைய வேண்டியதில்லை. நம் உடல் நோயின்றி இருக்கவும் நோயை எதிர்க்கும் சக்தியை வளர்த்துக் கொள்ளவும் வெள்ளைப் பூண்டு பெரும் அளவில் துணை புரிகிறது.

இதில் ஏ மற்றும் சி வைட்டமின்கள் ஏராளமாக இருக்கின்றன. முக்கியமாக உப்புச் சத்துக்களும் கந்தகமுங்கூட இதில் உள்ளன.

அதன் நெடிக்குப் பயந்தே பலர் அதை உண்பதில்லை. வீட்டு வைத்தியத்தில் பல மருந்துகளுக்கு வெள்ளைப் பூண்டு பயன்படுகிறது.

இரைப்பை, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வெகுகாலமாகவே வெள்ளைப் பூண்டை மருந்தாக உபயோகிக்கிறார்கள்.

வெள்ளைப்பூண்டின் பருப்புகளைத் தோலை உரித்துவிட்டு. இலேசாக நசுக்கிப் துவரம் மற்றும் இதர பருப்புகளில் போட்டு சமைத்து சுடச்சுட சாதத்தில் கலந்து நெய் போட்டுச் சாப்பிட்டால் சுவையாகவே இருக்கும். இரண்டொரு மிளகையும் இடையில் கலந்து கொள்ளவேண்டும். மற்றும் சாம்பார், குழம்பு, பொரியல் இவைகளிலும் கலந்து சமைத்துச் சாப்பிடலாம்.

அஜீரணத்ததால் நேரும் வயிற்றுக்கோளாறையும், புளிப்பு சேருவதால் உண்டாகும் எரிச்சலையும் வெள்ளைப்பூண்டைத் தின்றே போக்கிவிடலாம்.

காது வலிக்கிறதா? பூண்டு போட்டுக் காய்ச்சிய தேங்காய் எண்ணெயை இரண்டொரு சொட்டுகள் விட்டால் சரியாகிவிடும. நகச் சுற்றுக்கும் இது கைகண்ட மருந்தாகும். சுண்ணாம்பு தண்ணீருடன் பூண்டு பருப்புகளை வைத்து இழைத்து கட்டினால் நகச்சுற்று அப்படியே அமுங்கிவிடும்.

நகச்சுற்று, பழுத்தும் உடையாமல் சுருக் சுருக்கென்று வலித்துக் கொண்டேயிருந்தால் இளஞ்சூடான சாதத்தில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் ஒரு பருப்புப் பூண்டும் சேர்த்து நசுக்கி வைத்துக் கொண்டால் சீக்கிரம் உடைந்துவிடும்.

வெள்ளைப் பூண்டு பருப்புகளை நசுக்கி சமமாகத் தண்ணீரைக் கலந்து உள்ளுக்குக் கொடுத்தால் காலரா கிருமிகள் அழிந்துவிடும்.

இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வெள்ளைப் பூண்டு சேர்ந்த மருந்து மிகவும் நன்மை தரும். அவர்கள் காலை மாலை இருவேளைகளிலும் வெள்ளைப்பூண்டு பருப்புகளைச் சாப்பிட்டு வந்தால் நல்லது. பச்சையாகவும் தின்னலாம். அவித்தும் தின்னலாம். இதனால் நோய் நீங்குவதோடு உடலுக்கு பலமும் உற்சாகமும் உண்டாகும்.

சளியால் துன்புறுபவர்களுக்கு பூண்டுப் பருப்புகள் சீலவற்றை நெருப்பில் சுட்டுக் கொடுக்கலாம். அல்லது இரண்டொன்றாக நசுக்கி, ஒரு தக்காளி, சிறிது உப்பு இவை மூன்றையும் தாரளமாகத் தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து அந்த சூப்பைக் கொடுக்கலாம். இதைக் குடிப்பதால் வயிற்றில் உள்ளள புழுக்கள் கூட வெளியே வந்துவிடும்.

குழந்தைகளுக்கு வரும் மாந்த வலிப்புக்கு முதுகெலும்பில் வெள்ளைப்பூண்டை நசுக்கி பற்றுப் போட்டால் அது குறைந்துவிடும்.

இளங்குழந்தைகளுக்கு பூண்டு தட்டிப் போட்டு காய்ச்சிய விளக்கெண்ணெயை கையிருப்பாக வைத்துக் கொண்டு வெயில் வேளைகளில் உச்சியிலிடுவது நல்லது. இதை உள்ளுக்கும் புகட்டலாம்.

வயிற்றுக் கோளாறுகள் நீங்க இந்த விளக்கெண்ணெயில் பூண்டுடன் ஓமம், வசம்பு இவற்றையும் சேர்த்துக் கொள்வது நலம். இதனால் வளரும் குழந்தைதகள் எப்பொழுதும் ஆராக்கியமாக இருப்பார்கள்.

ஆலிவ் எண்ணெயோடு சேர்த்து அரைத்து விழுதாக்கிய பூண்டு பல சரும நோய்களுக்கு மருந்தாகும்.

நிமோனியா வந்தவர்கள் நாள்தோறும் சிறிது பூண்டை உண்டுவந்தால் ஆச்சரியப்படத்தக்க பலன் தெரியும். விரைவில் காய்ச்சல் நிற்பதோடு நுரையீரல்களும் சுத்தமாகும்.

தொண்டைச் சளிக்கு பாலில் பூண்டை போட்டுக் காய்ச்சி கொடுத்தால் குணமாகும். நுரையீரலில் சேர்ந்து விட்ட சளிக்கு பூண்டை நசுக்கி நெஞ்சில் பற்று போட்டால் கரைந்துவிடும்.

குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டியதும் நம் முன்னோர்கள் மஞ்சள் பொடியோடு ஒரு பூண்டையும் நசுக்கி உச்சந் தலையில் தேய்ப்பார்கள். அந்தப் பூண்டுத் தோலையும் சாம்பிராணியுடன் கலந்து புகைபோட்டு காட்டுவார்கள்.

உள்ளிப் பூண்டுக்கு சீதளத்தை இழுக்கும் குணமும் விஷக் கிருமிகளை அழிக்கும் சக்தியும் உள்ளது.

பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளை ஒழுக்கிற்கு வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி நூறு கிராம் அளவு எடுத்து சாறு பிழிந்து பாதிப்பக்கு உள்ளான பெண்களுக்கு கொடுக்க நல்ல குணம் தெரியும்.

அரைக்கீரையுடன் பூண்டும் மிளகும் தக்க அளவு சேர்த்து குழம்பு வைத்து இரவு நேரத்தில் சாப்பிட, உடலில் தோன்றும் அயர்வும் வலியும் நீங்கி உடல இலேசாகவும், சுகமாகவும் ஆகிவிடும்.

அடேங்கப்பா! இந்த வெள்ளைப்பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்தான் எத்தனை எத்தனை!...

ஆகவே இந்தத வெள்ளைப்பூண்டை அதன் வாசனை பிடிக்காவிட்டாலும் உணவில் அவ்வப்போது பயன்படுத்தி நலம் பெறலாம் இல்லையா?!

இப்பொழுது இதன் குணத்தை நன்கு தெரிந்து கொண்டதால் இனிமேலாவது இதை பயன்படுத்தி பலன் பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.








.

Wednesday, January 18, 2012

தேனருந்தும் படலம்






பூக்களுக்கும் வண்டுகளுக்கும்
ஓயாத சண்டை

ஏன் வருகிறீர்கள்
எங்கள் நிம்மதியைக் கெடுக்க
என்றன பூக்கள்

தேன்பருகத்தானே
தேடி வருகிறோம்
என்றன வண்டுகள்

தேன்கொடுக்க விருப்பமில்லை
இனி வராதீர்கள்

ஆமென் என்றன
வண்டுகள்

காலங்கள் கடந்தன
கடிகாரங்கள் உடைந்தன

மகரந்தசேர்க்கை நின்றுபோய்
பூக்களினம் அழியத்தொடங்கியபொழுது….

தொடங்கியது அந்த
பூக்களின் மாநாடு

ஆர்ப்பாட்ட போர்டுகள்
அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டன

வண்டினத்தை வரவேற்று
பாடலொன்று இயற்றப்பட்டது

வசந்தகீதம் கேட்டு
தேடிவந்தன வண்டுகள்

மறுபடியும்
தொடங்கியது
அங்கே...
தேனருந்தும் படலம்……..!













டிஸ்கி: வேலைப்பளுவால் அடிக்கடி வலைப்பூக்கள் பக்கம் அடிக்கடி வரமுடியவில்லை சொந்தங்களே!.




.

Friday, January 13, 2012

பணக்காரனாக நூறு வழிகள்

அந்த ஊரிலேயே பணக்காரர் அவர். நல்ல காரியங்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கும் வள்ளலாகவும் இருந்தார்.

ஒரு நாள் அந்த ஊரில் உள்ள பூங்கா ஒன்றில் குடும்பத்துடன் அவர் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கும்போது கந்தல் ஆடை அணிந்த பிச்சைக்காரன் ஒருவன் எதிரே வந்தான்.

அந்த பிச்சைக்காரன் அந்த செல்வந்தரைப் பார்த்து “ ஐயா! நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். என் தோற்றத்தைப் பார்த்து என்னை பிச்சைக்காரன் என்று எண்ணிவிட வேண்டாம். நான் ஒரு எழுத்தாளன். புத்தகம் ஒன்று எழுதி உள்ளேன் “ என்றான்.

அந்த செல்வந்தர் வியப்புடன் “ அப்படியா! என்ன புத்தகம் எழுதி இருக்கிறாய்?” என்று கேட்டார். “ பணக்காரனாக நூறு வழிகள் என்ற தலைப்பில் புத்தகம் எழுதி உள்ளேன் “ என்றான்.

அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “ எழுத்தாளன் என்கிறாய். பணக்காரனாக நூறு வழிகள் என்று புத்தகம் எழுதியிருக்கிறேன் என்கிறாய். நீ எழுதிய புத்தகத்திற்கும் உன் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லையே. பிச்சை எடுத்து அல்லவா வாழ்க்கை நடத்துகிறாய் “ என்று கேட்டார்.

“ பணக்காரனாக நூறு வழிகளில் இதுவும் ஒரு வழிதான் அய்யா. இதையும் அப்புத்தகத்தில் எழுதியிருக்கிறேன் “ என்று பதிலளித்தான் அவன்.

அந்த பணக்காரர் வயிறு குலுங்க சிரித்துவிட்டு புத்தகத்தை வெளியிட அவனுக்கு தேவையான பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்.









.

Wednesday, January 11, 2012

சிட்டுக்குருவி மனம்

புரிந்துகொள்ளுங்கள்
புரிந்துகொள்ளுங்கள் என்று
கூவுகிறது இந்த உலகம்
யாரும் புரிந்துகொள்ள முடியாத
பாஷையில்.

*****

தனக்கு மட்டுமே
தலைபாரம் என்று
புலம்புகிறது
இந்த
சிட்டுக்குருவி மனம்

*****

சில பொழுதுகள் சிறகுகளோடு
சில பொழுதுகள் சிலுவைகளோடு
சுவாரஸ்யமாகத்தானிருக்கிறது
இந்த
யுத்தக்களம்

*****

எதிர்த்திசையில் நடந்தே
பழக்கப்பட்டுப் போன
கால்களோடும்
தனக்கே உதவி செய்யாத
கைகளோடும்
என்னாலேயே
வசப்படுத்த முடியாத
என் மனதோடும்
வாழ்ந்துதான் ஆகவேண்டியிருக்கிறது.

*****

முடிந்துவிடுவது போலும்
முடிவே இல்லாதது போலும்
தோற்றம் தரும்
ஒரு விளையாட்டைப் போல
கழிகிறது
இந்தப் பொல்லாத வாழ்க்கை.

**********







.

Tuesday, January 10, 2012

எல்லோருக்கும் மரியாதை

இங்கிலாந்தில் புகழ்பெற்ற நாடகாசிரியர் ஒருவர் இருந்தார்.தன் பேரனிடம் அவர் " நற்பண்புகள் உள்ளவனாக நடந்துகொள். யாராக இருந்தாலும் மரியாதை செய்." என்று அறிவுரை கூறினார்.
"அப்படியே நடப்பேன்" என்றான் பேரன்.

இருவரும் நடந்து சென்றுகொண்டிருந்தனர். எதிரில் ஒரு பிச்சைக்காரன் தட்டுத் தடுமாறியபடி வந்தான். அவன் மார்பில் தொங்கிய அட்டையில் " எனக்கு கண் தெரியாது. உதவி செய்யுங்கள்" என்று எழுதியிருந்தது.

வெள்ளி நாணயம் ஒன்றை எடுத்துத் தன் பேரனிடம் கொடுத்து " பிச்சைக்காரனின் தட்டில் போட்டுவிட்டு வா" என்றார். பேரனும் அப்படியே அந்தக் காசை தட்டில் போட்டான்.பிச்சைக்காரனும அங்கிருந்து சென்றான்.

"உனக்குச் சிறிதுகூட மரியாதை தெரியவில்லையே. பிச்சைக்காரனுக்கு உன் தொப்பியைத் தூக்கி முதலில் வணக்கம் செலுத்தி இருக்கவேண்டும். அதன் பிறகு காசைத் தட்டில் போட்டிருக்க வேண்டும். நீ அப்படியே செய்தாயா? " என்று கேட்டார் அவர்.

" தாத்தா! அந்த பிச்சைக்காரனுக்குக் கண் தெரியாது. நான் வணக்கம் செலுத்தி இருந்தால் அவன் பார்த்திருக்க முடியாது" என்று பதில் சொன்னான் பேரன்.

" அந்தப் பிச்சைக்காரன் கண் பார்வை தெரியதாதவனைப் போல் நடிப்பவனாக இருந்தால் நீ மரியாதை செய்யாததைப் பார்த்த அவனுக்கு வருத்தம் ஏற்படும் அல்லவா?" என்று கேட்டார் அவர்.

" என் செயலுக்கு வருந்துகிறேன். இனி எல்லோருக்கும் வணக்கம் செலுத்துவேன். மரியாதை தருவேன்" என்றான் அவன்.











.

Sunday, January 8, 2012

நரம்பு தின்னும் நாய்கள்






என் எலும்புகளை
தின்று முடித்த
நாய்களுக்கு
இன்னும்
பசியடங்கவில்லை
என் நரம்புகளையும்
தின்னத் தொடங்கிவிட்டன.

*******

புகார் கொடுக்க
நேரமிலலை
புகார் வாங்கவும்
ஆளுமில்லை
காரணம்
புகார்களே
இங்கு
உணவாகிவிடுகின்றன.

*******

ஆகவே
இன்று முதல்...
இந்த சீதைகள்
மாதவிகளாகிறார்கள்!







டிஸ்கி: விலைமாதுவும் அவள் மகள்களும்













.

Saturday, January 7, 2012

மனிதனைப் பாடும் நிலா




நிலாவைப் பாடு
நிலாவைப் பாடு
என்றனர்
என் நண்பாகள்

நிலாவைப் பார்த்தேன்
முதலில் மானுடம் பாடு
மனிதனின் வறுமையைப் பாடு
பின்பு நீ என்னைப்பற்றியல்ல
நான் உன்னைப் பற்றி எழுதுகிறேன்
ஒரு காவிய கவிதை

நிலவை
மானிடர்கள் போற்றிய
காலங்கள் மாறும்
மானிடனை நிலவு போற்றிய
காவியம் அரங்கேறும்
என்றது நிலவு

என் நண்பர்களைப் பார்த்தேன்
அவாகள் முகங்களை
மூடியிருந்தன
வெட்கத் திரைகள்.






.

Friday, January 6, 2012

எதிலும் ஒரு நியாயம் வேண்டாமா ?




சூஃபி அறிஞரான சூனூன் என்பவர் கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். புதிதாக மாணவனாகச் சேர வருபவர்களிடம் “ இதற்கு முன்பு நீ எந்த ஆசிரியரிடமாவது கல்வி கற்று இருக்கிறாயா? என்னிடம்தான் முதன் முதலாக கல்வி கற்க வருகிறாயா? “ என்று கேட்பது வழக்கம்.

“ இங்குதான் முதன் முறையாக கல்வி கற்க வருகிறேன் ” என்று மாணவன் பதில் சொன்னால் உரிய கட்டணம் வாங்குவார். ஏற்கனவே ஒரு ஆசிரியரிடம் கல்வி கற்று இருக்கிறேன் என்றால் இரட்டிப்பு கட்டணம் வாங்குவார்.

அவரின் இந்த விந்தையான நடவடிக்கையைப் பார்த்து எல்லோரும் வியப்படைந்தனர். நண்பர் ஒருவர் அவரிடம் “ஏற்கனவே கல்வி கற்றவருக்கு நீங்கள் கற்றுத்தர வேண்டியது அதிகம் இருக்காதே. அவரிடம் பாதிக் கட்டணம் வாங்குவதுதானே சரி. இதுதானே உலக வழக்கம். ஆனால் நீங்களோ புதிதாகக் கற்க வருபவர்களிடம் வாங்குவதைப்போல இரண்டு மடங்கு கட்டணம் வாங்குகிறீர்களே. இது ஏன்? ” என்று கேட்டார்.

அதற்கு அந்த அறிஞர் “ நண்பரே! நான் கற்றுத் தரும் கல்வி மாறுபாடானது. என் வழிமுறைகள் வேறுபாடு ஆனவை. ஏற்கனவே கல்வி கற்றவர் என்னிடம் வந்தால் அவர் கற்றிருப்பதை எல்லாம் மறக்க வைக்க நான் உழைத்தாக வேண்டும். புதிதாக வருபவர் நான் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வார். அவருக்காக நான் அதிகம் உழைக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதனால்தான் இப்படிப்பட்ட கட்டண முறை” என்று விளக்கினார்.







.

Thursday, January 5, 2012

பம்பர விளையாட்டு


பம்பர விளையாட்டுத்தான்
இந்த
வாழ்க்கை

பம்பரமாய்
நாம்

கயிறாய்
நம் ஆசை.


















டிஸ்கி:

அன்பு பதிவுலக நண்பர்களுக்கு.

என்னிடம் தற்போது கணினியோ அல்லது மடிக்கணினியோ இல்லை. ஆகவே நான் பதிவுகளை இடுவதற்கு எனது அலுவலகக் கணினியையே பயன்படுத்துகிறேன். வீட்டிற்கு சென்ற பிறகே பின்னூட்டம் மற்றும் வாக்குகளை எனது நோக்கியா மொபைலை பயன்படுத்தியே இட்டு வருகிறேன். அதில் தமிழில் டைப் செய்ய இயலாததால்தான் என்னுடைய பின்னூட்டங்கள் முழுவதும் ஆங்கிலத்தில் இருக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. தமிழ் ஆர்வலர்கள் சிலர் என் மீது மிகுந்த வருத்தத்துடன் இருக்கலாம். தமிழில் பின்னூட்டமிட இயலவி;ல்லையே என்று வருத்தப்படாத நாளில்லை. என்ன செய்வது? சூழ்நிலைக் கைதியாய் இருக்கிறேன். கூடிய சீக்கிரம் மடிக்கணினியோ அல்லது மேஜைக்கணினியோ வாங்கி விடுகிறேன். அப்புறம் எல்லாம் தமிழ் தமிழ்தான். ஒரே தமிழ்மயமாக்கி விடுகிறேன். அதுவரைக்கும் பொறுத்தருள்க.










.

Wednesday, January 4, 2012

தன்னைப் போலவே உலகம்




நண்பகல் நேரம். வெயில் சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்தது. மரத்தின் அடியில் ஒருவன் படுத்து நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். வெயில் அவன் மீது பட்டுக்கொண்டிருந்தது.

அந்த வழியாக வந்த விறகு வெட்டி ஒருவன் அவனைப் பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாகத்தான் இவன் இருக்கவேண்டும். உழைத்த களைப்பினால்தான் இந்த வெயிலிலும் நன்கு தூங்குகிறான்” என்று சொல்லிக்கொண்டே சென்றான்.

அடுத்ததாகத் திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான். “இரவு முழுவதும் கண் விழித்துத் திருடியிருப்பான் போல இருக்கிறது. அதனால்தான் இந்த நண்பகல் நேரத்தில் கூட அடித்துப்போட்டது போல இப்படித் தூங்குகிறான்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அங்கே வந்தான். “காலையிலேயே இவன் நன்றாகக் குடித்துவிட்டான் போல இருக்கிறது. அதுதான் குடிமயக்கத்தில் விழுந்து கிடக்கிறான்” என்று சொல்லிச் சென்றான்.

சிறிது நேரத்தில் துறவி ஒருவர் அந்த வழியாக வந்தார். “இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும். வேறு யாரால் இத்தகைய செயலைச் செய்ய முடியும்” என்று அவனை வணங்கிவிட்டுச் சென்றார்.








.

Tuesday, January 3, 2012

அவிழ்க்க முடியாத முடிச்சுகள்




நான் போடவில்லை
ஆனாலும்
விழுந்துகொண்டேதான் இருக்கின்றன
முடிச்சுகள்

ஒருபக்கம்
ஒவ்வொன்றாய்
அவிழ்த்துக்கொண்டே இருக்கிறேன்
நான்

மறுபக்கம்
கொத்துக் கொத்தாய்
போட்டுக்கொண்டே இருக்கிறது
வாழ்க்கை.






.

Monday, January 2, 2012

உடல் அழுக்கா? மன அழுக்கா?

கோதாவரி ஆற்றங்கரையில் ஞானி ஒருவர் வசித்து வந்தார். நாள்தோறும் அதிகாலையில் அவர் அந்த ஆற்றில் நீராடி வந்து கடமைகளை ஆற்றி வந்தார். ஒருநாள் வழக்கம் போல் ஆற்றில் அவர் நீராடிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அவரைப் பிடிக்காத தீயவன் ஒருவன் மரத்தின்மேல் இருந்தபடியே அவர்மீது எச்சிலைத் துப்பினான். அவர் ஒன்றும் பேசாமல் பொறுமையாகச் சென்று விட்டார். மறுநாளும் இப்படியே நடந்தது. அன்றும் அவர் அப்படியே பொறுமையாகச் சென்று விட்டார். இப்படியே பலநாட்கள் தொடர்ந்தது.

ஒவ்வொரு முறையும் ஏதும் பேசாமல் ஆற்றிற்கு திரும்பவும் சென்று நீராடிவிட்டு வந்துகொண்டிருந்தார் அவர். அந்த துஷ்டனுக்கு இது மிகவும் ஆச்சரியத்தை அளித்தது.

ஒரு நாள் தன் செயலுக்கு வருந்திய அவன் அவர் கால்களில் விழுந்தான். “ ஐயா என் தீய செயலை மன்னியுங்கள். இத்தனை முறை நான் தங்கள் மீது எச்சில் துப்பியும் எப்படி உங்களால் கோபப்படாமல் இருக்க முடிந்தது? “

அதற்கு அவர் “ அன்பனே! நான் கோபப்பட்டு இருந்தால் என் உள்ளம் அழுக்காகி இருக்கும். உடல் அழுக்கானால் நீராடி தூய்மை செய்து கொள்ளலாம். உள்ளம் அழுக்கானால் எந்த வழியில் தூய்மை செய்வது? அதனால்தான் நான் அமைதியாக இருந்தேன் “ என்று விளக்கம் தந்தார்.



டிஸ்கி:

நான் பதிவெழுத ஆரம்பித்து 3 மாதங்கள் கூட நிறைவு பெறாத நிலையில், தமிழ்மணம் சிறந்த பதிவுகள் பட்டியலில் எனக்கு 59-வது இடத்தை தந்துள்ளது எனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது. நான் பதிவர் திரு. மோகன்குமார் எனக்கு மின்னஞ்சல் அனுப்பிய பிறகுதான் எனக்கு விசயமே தெரிய வந்தது (என் மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கை). அவருக்கும் தமிழ்மணத்திற்கும் பதிவர்களாகிய உங்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.







.